தமிழர்கள் விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
“இலங்கை, நீண்ட ஒரு அதீத அதிகார ஆட்சிக்குள் இருந்து மீண்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை மக்கள் சந்தோசமடைந்துள்ளனர்.
இலங்கையை பற்றி சிந்திப்போர் இதனை சிறந்த வாய்ப்பு என்று கூறுகின்றனர்.இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை வலுப்படுத்தப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சித்திரவதை மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும். எனினும் இவற்றில் இலங்கை தோல்வி கண்டால், மோசமான நிலை உருவாகும்.
இந்தநிலையில் தமிழர்கள் விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பதில் இலங்கையின் புதிய அரசாங்கம் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கும் சிங்களவர்களை போன்று சம உரிமை வழங்கப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடுகளுக்கு நோர்வே ஆதரவளிக்கும்” என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.
