அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது பிரதேசத்தில் வறிய குடும்பத்தினருக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் உயர் கல்வி நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோளின் பேரில் அம்பாறை சனாபில் ஹைர் பவுண்டேஷன் இதற்காக நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் மேற்படி பவுண்டேஷன் தலைவரும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் இலங்கை வக்பு சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது 82 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்காக பணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டு மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
அத்துடன் பவுண்டேஷன் உப தலைவர் கே.எல்.ஆதம்பாவா, அஷ்ஷெய்க் எம்.சி.பஷீர் மதனி, சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலின் செயலாளர் சி.எம்.ஏ.முனாஸ் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் "ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு" வழங்கும் திட்டத்தின் கீழ் ஏலவே அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட சுமார் 700 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment