எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கவிருந்த ஆதரவு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது.
மலையக மக்களின் வீடமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தமது கட்சி முன்வைத்திருந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து தெளிவான பதில் கிடைக்காத காரணத்தினாலேயே தமது கட்சியினர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம் நடக்கவுள்ள கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தாங்கள் அறிவித்திருந்த போதிலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தமது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் துணையமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பொது எதிரணியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றியும் சிந்திக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் ஒரு மாதத்துக்கு முன்னர் தான் ஜனாதிபதி முன்னிலையில் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி அமைச்சராக பொறுப்பேற்று ஒருமாதத்தில் கட்சியின் முடிவை மீள்பரிசீலனை செய்யும் அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றதா என்று தமிழோசை கேள்வி எழுப்பியது.
'அமைச்சர் (பதவி) எடுத்ததற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆம் போடுகின்ற ஆமாம் சாமியாக இருக்கமுடியாது' என்றார் இராதாகிருஷ்ணன்.
#bbC

0 comments :
Post a Comment