ஹாசிப் யாஸீன்-
எமது நாட்டின் அரசியலில் எதிர்வரும் 19ம் திகதி ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் மாற்றத்தின் பின்பு மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால் பாராளுமன்ற தேர்தலை நடத்தாது பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாக அலரிமாளிகை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் அதனால் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு சம்மாந்துறை மண் பாராளுமன்ற பிரதிநிதித்துத்தை இழக்க நேரிடுமாயின், அந்த அறிவிப்பு கிடைத்த பின்னர் நான் ஒரு நிமிடமும் அந்தப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கமாட்டேன் என்னுடைய பாராளுமன்ற உறுப்பினா் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அதனை இங்குள்ள மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு வழங்குவேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் சம்மாந்துறையில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன் சூளுரைத்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 35 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் உணா்வுகளோடு அரசியல் பணி செய்து வருகின்றோம். சம்மாந்துறை மக்களின் உணா்வு ரீதியாக எதிர்பார்க்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இந்த அரசின் பாராளுமன்ற நீடிப்பின் மூலம் இல்லாமல் செய்யும் ஜனநாயகத்திற்கு முரணான இச்செயலினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment