ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகரால் நிறுவப்பட்டதான இலங்கை மீதான விசாரணைக் குழுவின் முன்தோன்றி சாட்சியமளிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களை தடுப்பதற்கான செயற்பாடானது அடிப்படை உரிமை மீறல் என்பதுடன் நீதிக்கான உரிமையை அப்பட்டமாக மீறுகின்றதுமான செயற்பாடாகும் என்று
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய சம்பந்தன் எம்.பி. வடக்கு கிழக்கு மாகாண சபைகள் வெற்றிகரமாக இயங்குவதை விரும்பாத காரணத்தால் எமது மக்களின் ஜனநாயக ரீதியிலான அபிலாஷைகளை மறுத்து திசை திருப்பல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் நாள் குழுநிலை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்று முடிந்ததன் பின் பின்னர் அரசாங்கம் கூறிய கூற்றுத்தான் யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்பதும் அங்கு இடம்பெற்றது மனிதாபிமான நடவடிக்கை மாத்திரமே என்பதுமாகும்.
அதுமாத்திரமின்றி விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்பில் விமர்சிக்க முடியாது என்ற தோரணையிலும் கூறியிருந்தது. எனினும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதப்படுகொலைகள் அதாவது சிவிலியன்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளது.
இதன் பின்னணியிலேயே பின்னர் இலங்கை மீதான விசாரணை ஒன்றிணை மேற்கொள்வதற்கான நிபுணர்குழு ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக்குழு தனது பணிகளை மேற்கொள்ள முடியாத வகையில் தடைகள் போடப்படுகின்றன. இதனால் அந்த சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இயலாமை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று சாட்சியமளிப்பதற்கு விரும்புவோரும் மறுக்கப்படுவதால் அவர்களது அடிப்படை உரிமை பறிக்கப்படுவதுடன் இதற்கான உரிமையும் அப்பட்டமாகவே மீறப்படுகின்றது.
வடமாகாண சபையானது 3 இலட்சத்து 50 ஆயிரத்து 521 வாக்குகளைப் பெற்று இன்னும் கூறினால் 78 வீதமான வாக்குகளைப் பெற்று வடக்கு மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான தீர்ப்பினை வழங்கினர்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரப்பகிர்வினை மேற்கொள்வதற்குமோ மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. ஆனாலும் மக்களின் ஜனநாயக ரீதியில் அமைந்த வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு எல்லா வகையிலும் அரசாங்கம் முட்டுக்கட்டைகளையே இட்டு வருகின்றது. இங்கு இராணுவத்தின் பிரசன்னமானது வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றது.
வடமாகாண சபையின் நிலை இவ்வாறு இருக்கின்ற போது 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மத்திய அரசாங்கச் செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். இதனால் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் மீதான அதிருப்தி வியாபித்து காணப்படுகின்றது. இராணுவத்தின் தலையீடுகள் மாகாண சபைகளின் சீரற்ற தன்மைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அத்துடன் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் இவை தடையாக இருக்கின்றன.
வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சி முறைகள் வெற்றிகரமாக அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகின்ற அரசாங்கம் பல்வேறு விதமான திசை திருப்பல்களையும் மேற்கொண்டு வருகின்றது.
மத்திய அரசுக்கு நம்பிக்கையாக செயற்படுபவர்களால் மாத்திரம் வடக்கு கிழக்கில் செயற்பட முடியும் என்பதான நிலைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் கிழக்கு மாகாண முதலமைச்சரும் செயற்பட்டு வருகின்றார். இப்படியான நிலைமைகள் இந்நாட்டுக்கு பாரிய விளைவுகளையே தோற்றுவிக்கப்போகின்றது.
மேலும் கடந்த காலங்களில் அதாவது யுத்த காலங்களின் போது உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் இப்போது யுத்தம் இல்லை ஷெல் வீச்சுத்தாக்குதல் கிடையாது. அப்படியானால் இப்போது ஏன் உயர் பாதுகாப்பு வலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கேள்வியாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் வலிகாமம் பிரதேசத்துக்கு சென்றிருந்தால் அங்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன். எனினும் மீண்டும் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றால் வலிகாமத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கின்றேன்.
இதேவேளை இன்று வடக்கு செல்லும் வெளிநாட்டவருக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. கடந்த கால நிலைமைகளால் வெளிநாடு சென்றவர்களுக்கு தற்போது இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் இலங்கையர்தான் என்பதைக் கூறி வைக்கின்றேன்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்குத் திரும்பி தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு இடமளிக்கக்கூடாது. அவர்கள் இங்கு முதலீடுகளை செய்வதற்கு இடமளிப்பதில்லை. அவர்கள் இங்கு வியாபாரங்களை மேற்கொண்டால் நாட்டுக்கு நலமல்லவா? அப்படியானால் ஏன் இந்த புதிய தலைமுறை? அவர்களுக்கு தலைவிதிப்பது ஏன்?
இவ்விவகாரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் என்று விநயமாக கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment