றபீக் பிர்தௌஸ்-
சம்மாந்துறை வலயக் கல்விக் காரியாலயம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தினவிழா சம்மாந்துறையில் மிகச் சிறப்பாக (01) நடைபெற்றது.
சம்மாந்துறை கல்வி வலயப் பாடசாலைகளை மையப்படுத்தி இடம் பெற்ற இந்நிகழ்வின் பிரதான வைபவம் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளீர் கல்லூரியில் இடம் பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, சமூக சேவைகள். கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை. தொழிற் பயிற்சிக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அல்-மர்ஜான் முஸ்லிம் மகளீர் கல்லூரி முன்றலில் இருந்து சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம் வரை 'சிறுவர் விழிப்புணர்வு ஊர்வலம்' ஒன்றும் இடம் பெற்றது.
அமைச்சருடன் கல்விப் புலத்திலுள்ள ஆயிரக் கணக்கானோர் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டோருக்கு சுகாதார, சிறுவர் நன்நடத்தை அமைச்சரின் அனுசரனையில் தாகசாந்தி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதான வைபவமும், மாணவர் கலை நிகழ்வுகளும், கௌரவிப்பு நிகழ்வும் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளீர் கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இடம் பெற்றது.
இங்கு அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிறுவர் சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் என்பன அமைச்சரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும், முதியோர் கௌரவிப்பாக பிரபல கவிஞரும், எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான மாறன் யூ.செயின், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் ஆகியோர் அமைச்சர் மன்சூரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
அமைச்சர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்: 'நாம் பெற்ற செல்வங்களுள் பிள்ளைச் செல்வத்தைப் போலொரு செல்வம் வேறொன்று இருக்க முடியாது. இப்பிள்ளைச் செல்வங்களைச் சிறந்த முறையில் பாதுகாத்துப் பராமரிப்பது நமது தலையாய கடமையாகும்.' எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment