அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதி அமைப்பது தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை ஒலுவில் கிரீன் விலாஸ் விடுதியில் நடைபெற்றது.
நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பிரதேச செயலாளர் மொஹான் விக்கிரமராச்சி, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள இணைப்பாளர் எம்.எம்.ஜெசூர், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் கல்முனைக்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் கல்முனையில் சகல வசதிகளும் கொண்டதாக நவீன முறையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் உத்தேச திட்டத்தை முன்வைத்த மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர், நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கான அமைவிடத்தையும் முன்மொழிந்து அடையாளப்படுத்தியிருந்தார். அதன்போது குறித்த திட்டத்திற்கான அங்கீகாரத்தை பிரதம நீதியரசர் வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நீதி அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அமைச்சின் முகாமைத்துவக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நீதி அமைச்சு இக்கட்டிடத் தொகுதி நிர்மாணிப்புக்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் கல்முனைத் தொகுதி எம்.பி. மாநகர முதல்வர், பிரதேச செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இன்று கூடி, குறித்த நீதிமன்றக் கட்டிடத் தொகுதியின் அமைவிடத்தை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் நிர்மாணத் திட்டத்தை கூடிய விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment