கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது


“ கற்பவனாய் இரு கற்பிப்பவனாய் இரு கல்விக்கு உதவுபவனாய் இரு” என்ற திருக்குர் ஆன் வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் கரைவாகுப்பற்றின் கல்விமான்களில் முன்னோடியும் முன்னை நாள் குவாசி நீதிபதியுமாகிய ஜனாப். எஸ். ஆதம்பாவா அவர்கள் எம்மை விட்டும் மறைந்து இறையடி சேர்ந்து ஆறு வருடங்களாகின்றன.

ஆர்ப்பரிக்கும் கடலும் பச்சைப் பசேலென்ற வயல் வெளியும் சூழ்ந்திருக்கும் தென் கிழக்கின் முக வெற்றிலையாம் கல்முனையில் கல்முனைக் குடிக்கிராமத்தில் மீராலெப்பை சிக்கந்தருக்கும் காசிம் பாவா அவ்வா உம்மாவிற்கும் தலைமகனாக 1930. 08.07ம் திகதியன்று பிறந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை கல்முனைக்குடியில் இன்று கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையில் பெற்றார்கள். 1943ம் ஆண்டுஇலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்ற 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்கள். இவருடன் அதே பாடசாலையிலிருந்து அதே வருடம் முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் சட்டத்தரணி ஏ.ஆர். மன்சூர் அவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சித்தியடைந்ததன் பிற்பாடு தனது சொந்தச் செலவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் இருவருட ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் ;முதல் ஆசிரிய நியமனம் 1.06.1954 இல் ஹம்பாந்தோட்டை முஸ்லீம் வித்தியாலயத்திற்குக் கிடைத்தது. அப்பாடசாலை இன்று ஹம்பாந்தோட்டை ஸாஹிறா கல்லூரி என்று அழைக்கப்படுகின்றது. எஸ். ஆதம்பாவா அதிபர் அவர்களிடம் கல்வி கற்ற பலர் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர் அவ்வூர் மக்கள் இன்றும் அவரை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நினைவு கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஆண்கள் வித்pயாலயம் கல்முனைக்குடி ஆண்கள் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி முஸ்லீம் மஹா வித்தியாலயம் போன்றவற்றிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார்கள். மீண்டும் 01.01.1962 இல் தான் கற்ற பாடசாலையான கல்முனைக்குடி ஆண்கள் வித்தியாலயத்திற்கு மீள நியமனம் கிடைத்தது. அன்றிருந்த அரசியல் வாதிகள் மூலம் இப்பாடசாலையை அபிவிருத்தி செய்தார். 

தனது சிறப்பான சேவையின் காரணமாக 01.01.1963ம் ஆண்டு அதிபராகப் பதவி உயர்வு பெற்று அஃ கஹட்டகஸ்திலிய முஸ்லீம் வித்தியாலயத்தில் அதிபராகப் பதவியேற்றார். அக்காலத்தில் சிங்களப்பாடசாலையின் ஒரு பகுதியாக விளங்கிய அப்பாடசாலையை தனிப்பாடசாலையாக அமைத்து ஆறரை வருடங்கள் கடமையாற்றி அப்பாடசாலையை மஹா வித்தியாலயமாக தரமுயர்த்தினார். இதனை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூருகின்றனர்.

பின்பு 01.10.1968 இல் கல்முனை அல்- மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் கடமையேற்று அப்பாடசாலையின் அபிவிருத்திக்காக பாடுபட்டார். இவரது அதிபர் சேவையின் அதிகமான காலத்தை அன்றைய கடற்கரை பாடசாலை என்றழைக்கப்பட்ட இன்றைய அல்- பஹ்ரியா மஹா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது. 01.11.1974 இல் இப்பாடசாலையின் அதிபராகக் கடமையேற்ற தான் ஓய்வு பெறும் வரை சுமார் பதினேழு ஆண்டுகள் இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றினார். 

இப்பாடசாலையின் பெயர் மாற்றம் பெற்றதோடு பாடசாலையின் பௌதீக கல்வி வளர்ச்சியில் அதீத அக்கரை காட்டினார். தனது பாடசாலை நண்பனான அன்றிருந்த மக்கள் பிரதிநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள்;; மூலம் பாடசாலையின் கட்டிடத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பாடசாலையும் கல்வி ரீதியிலும் வளர்ச்சி கண்டது. இவரது சேவை காரணமாக 61 வயது மட்டும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. அன்றைய காலத்தில் இலங்கையில் இத்தகைய சேவை நீடிப்பு வழங்கப்பட்டவர்கள் இருவரே இருந்தனர். ஒருவர் எஸ். ஆதம்பாவா அவர்கள் மற்றையவர் முன்னை நாள் டீ. எஸ். சேனநாயக்க கல்லுர்ரி அதிபர். ஆர். ஐ.ரி. அலஸ் அவர்கள்.

தான் கல்விச் சேவை புரிந்து கொண்டிருந்தபோது சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுபவராக இருந்து வந்தார். கல்முனைக் குடி ஜம்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளராக 1975ம் ஆண்டு தொடக்கம் 1989ம் ஆண்டு வரை கடமை புரிந்தார். இவர் நம்பிக்கையாளராக இருந்த காலத்திலேயே பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும் கல்முனை மாவட்டக் கிளை தலைவராகவும் கடமையாற்றியவர்.

இவ்வாறு பல பணிகளில் ஈடுபட்ட அவர்கள் 1996ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முழுக்கரைவாகுப்பிரதேசத்திற்குமான குவாசி நீதிபதியாப் பணியாற்றினார்கள். சமாதான நீதவானான இவர்கள் தான் வாழந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வழிகளிலும் முன்னின்று உழைத்தார். கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளராக தான் மரணிக்கும் வரை சுமார் 15 ஆண்டுகள் கடமையாற்றினார்.

எழுத்து ஆக்கத் துறையில் ஈடுபாடு காட்டிய அவர் நாடாரிலக்கியத்pல் பாண்டித்தியம் பெற்றவர். இவருடைய ஆக்கங்கள் பல புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன மட்டுமன்றி இவருடைய நாட்டார் பாடல்களுக்கு தேசிய விருதுகளும் கிடைத்திருக்கின்றன.

ஹாஜி உஸ்மான் சாஹிப் அவர்களுடன் இணைந்து கல்முனைக்குடி ஜூம்மா பள்ளி வாசல் வரலாறு மற்றும் வரலாற்று பேழை ஆகிய நூல்களை இணையாசிரியராக இருந்து வெளியிட்டார்

என்றும் கோட் அணிந்தவராக புன்முறுவல் பூத்த முகத்துடனே தன்னை நாடி வருவோருக்கு சேவை செய்பவராகவே இருந்து வந்தார்.எப்போதும் கோட் அணியும் காரணத்தால் எல்லோரும் “கோட் ஆதம்பாவா சேர்” என்று மரியாதையுடன் அழைப்பர்

கல்முனைக்குடியின் முதல் பயிற்றப்பட்ட பெண் ஆசிரியையான கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் ஆயிஸா ஆதம்பாவா அவர்களை தனது வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்த எஸ். ஆதம்பாவா அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள். சிரேஸ்ட புதல்வி திருமதி ஆத்திகா சேகு முகம்மட் கல்முனை அல்- மிஸ்பாஹ் வித்தியாலய ஆசிரியைஇ இவரது கணவர் எம். எஸ். முகம்மட் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகக் கடமையாற்றுகின்றார். கனிஸ்ட புதல்வி சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் இவரது கணவர் சிரேஷ்ட சட்டத்தரணி முகம்மட் ஷாரிக்காரியப்பர். ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்த அதிபர் எஸ். ஆதம்பாவா அவர்களின் மூத்த சகோதரியின் மகனே இன்றைய கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி. எச். எம். எம். ஹரீஸ் அவர்கள் ஆவார்.

தான் வாழும் போதே பிறருக்கு உதவுவதையும் வழிகாட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர். இப்பிரதேசத்தில் இன்று ஆசிரியர்களாக இருப்பவர்கள் அத் தொழிலைப் பெற்றுக் கொள்ள உந்து சக்தியாக இருந்தவர்.
தனது ஓய்வு நிலையில் மார்க்க பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தவர் தனது மனம் போன்று தனது உடன்பிறப்புகள் பிள்ளைகள் சுற்றத்தவர் சூழ்ந்திருக்க றமழான் மாதம் 26ம் நாளன்று 2008ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி தனது 78ம் வயதில் இறையடி சேரந்தார்.

அன்னாருக்கு இறைவன் ஜன்னதுல் பிர்தவ்ஸை வழங்குவானாக 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :