சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் கடந்த ஞாயிறன்று (03 ஆம் திகதி )அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு, இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரியிடம் குறிப்பிட்டார்.
குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளிலேயே மேலதிக விசாரணையின் பொருட்டு அம்மாணவன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்..
தனது அறையில் இரவு நெடுநேரம் படித்துவிட்டு, நித்திரையின் பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்து கழிப்பறைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாமல் கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கட்டியிருந்த இரண்டு நபர்களினால் சந்திரகுமார் சுதர்சன் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்.
கைகள், வாய் என்பன கட்டப்பட்ட நிலையில் மாணவர் விடுதியருகில் உள்ள பற்றைக்காட்டில் மயங்கிய நிலையில் இவர் போடப்பட்டிருந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து விடுதியைச் சென்றடைந்த இவரை சக மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
பின்னர் அவர் அங்கிருந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு சனிக்கிழமை அவர் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோதேஇ அவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
தான் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு குறித்த மாணவன் வழங்கிய வாக்கு மூலம் முரண்பாடுடையதாகவும் சந்தேகத்துக்கு இடமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண குறித்த மாணவன் காயங்களை தானாக ஏற்படுத்திக்கொண்டாரா என்பது தொடரொபில் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் கேசரியிடம் சுட்டிக்காட்டினார்.
காயங்களை தானாக ஏற்படுத்தி பல்கலையில் இன மோதல் அல்லது பாகுபாடு ஒன்றை தோற்றுவிக்க குரித்த மாணவன் முயற்சித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக குரிப்பிட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் குரித்த மாணவனை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக குரிப்பிட்டனர்.
இந்த மாணவன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட விடயமானது கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையம் ஊடாக முகமாலையில் உள்ள அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கியுள்ள விடுதியின் கழிப்பறையொன்றில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அங்கு கல்வி கற்கக் கூடாது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உயிரச்சுறுத்தல் விடுத்து, கொச்சைத் தமிழில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்தன.
இரண்டாவது தடவையாக அத்தகைய சுவரொட்டிகள் இரவு நேரத்தில் ஒட்டப்பட்டபோதுஇ அந்தக் கழிப்பறைக்குச் சென்றபோதே இந்த மாணவன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சமனல கந்த பொலிஸார் அதே பல்கலையில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் யோக நாதன் நிரோஜன் என்ற மாணவனை கைது செய்திருந்தனர்.
எனினும் முன்னாள் புலிகள் இயக்க உருப்பினர் என்பதனாலும் அவரது தொலைபேசியில் காணப்பட்ட சில சந்தேகத்துக்கு இடமான தகவல்களாலும் சமனல கந்த பொலிஸாரால் அந்த மாணவன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தார். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குரித்த மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கானது அக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.vk

0 comments :
Post a Comment