த.நவோஜ்-
பலஸ்தீன காஸா மக்களுக்கு ஆதரவாகவும், பலஸ்தீன மற்றும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போதுள்ள யுத்த நிறுத்தம் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணி இடம்பெற்றது.
கல்குடா உலமா சபையும், கல்குடா மஜ்லிசுல் சூரா சபையும் இணைந்து ஏற்பாடு செய்த அமைதிப் பேரணியும் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, காவத்தமுனை போன்ற பிரதேசத்தில் உள்ள பதினெட்டு ஜும்ஆ பள்ளிவாயல்களிலிருந்து வந்த பொதுமக்கள் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடினர்.
அங்கு காஸா மக்களின் இன்றைய நிலைமை என்ற தலைப்பில் கல்குடா சூரா சபைத் தலைவர் மௌலவி.ஏ.ஜீ.ஹாமீத் சதகா உரை நிகழ்த்தியதுடன், காஸா மக்களின் நிம்மதிக்காக வேண்டியும், எமது நாட்டின் அமைதிக்காக வேண்டியும் இடம்பெற்ற தூஆ பிராத்தனை கல்குடா உலமா சபை உப தலைவர் மௌலவி ஏ.எம்.சுபைர் முப்தி நடாத்தினார்.
இறுதியாக காஸா மக்களுக்கு ஆதரவாகவும், பலஸ்தீன மற்றும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது யுத்தம் நிறுத்தம் தொடர வேண்டும் என்ற மகஜரை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துக்கும் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்குமான மகஜர்கள் கல்குடா உலமா சபை மற்றும் கல்குடா மஜ்லிசுல் சூரா சபை உறுப்பினர்களால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர் மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் சார்பாக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் ஆகியோரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு கொடிகள் எரிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment