புதன்கிழமை நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்ய வந்ததாகவும், அதுபற்றி மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தாம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் தாம் அதுபற்றி கவனிப்பதாக கூறியதாகவும், அத்துடன் சமய விவகாரங்களைக் கையாளும் பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததாகவும் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினரான எஸ்.வை.எம். சலீம்தீன் குறிப்பிட்டார்.
இது பற்றி புதன் கிழமை தாம் தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பாளர் திரு. ஏக்கநாயக்காவிடம் தெரிவித்த போது, அவர் தமது கோரிக்கைக்கு உடன்பட மறுப்புத் தெரிவித்ததாகவும் சலீம்தீன் கூறினார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்று பள்ளிவாசல் அமைவிடத்தை அளவீடு செய்ய முற்பட்ட போது, அதற்கு எதிர்;ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரங்கிரி தம்புள்ளு ரஜமஹாவிகாரையின் பரிபாலன சபை (தாயக சபா) இனாமலுவே சுமங்கல தேரரின் தலைமையில் கூடி ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்ந்தும் இழுபறியாகவே இருந்து வருகிறது.
தம்புள்ளை பள்ளிவாசலை தாம் அகற்றப்போவதில்லையென்றும், பிரிதொரு தரப்பினரே அந்தக் காரியத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தேரர் சிலரிடம் கூறியுள்ளார்.
இவ்வாறிருக்க தம்புள்ளை காளியம்மன் கோயில் விவகாரமாக தனியார் ஊடகமொன்று செவ்வாய்க்கிழமை இரவு செய்தியில் தகவல் வெளியிட்டுள்ளது.
தகவல் : அப்துல் ஹபீஸ்

0 comments :
Post a Comment