வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்தமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரது பேஸ்புக் கணக்கை நீக்கியதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளரின் பிரதான பிரசார இயந்திரமாக இருந்து வந்துள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பல வாசகர்கள், மேற்படி அமைப்பு மற்றும் அதன் செயலாளரின் கணக்குகளில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் உரைகள் வெளியிடப்படுவதாக முறைப்பாடு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் கணக்குகளை நீக்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்தது.
பல சந்தர்ப்பங்களில் தனது பேஸ்புக் கணக்கிற்கு அறிவுறுத்தல்கள் வந்ததாகவும் பின்னர் அது முற்றாக நீக்கப்பட்டதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
தனது பேஸ்புக் கணக்கு மட்டுமல்லாது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய பலரது பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள முஸ்லிம் இனவாதிகள் தனக்கு எதிராக தொடர்ச்சியாக பேஸ்புக் வலைத்தளத்திற்கு முறைப்பாடு செய்த நிலையில் இவ்வாறு தனது கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.
தான் எந்தவொரு சமயத்திற்கு எதிராகவோ,எந்தவொரு பொதுமகனுக்கு எதிராகவோ கருத்து வெளியிடவில்லை எனவும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தான் கருத்து பகிரவில்லை எனவும் ஞானசார தேரர் கூறினார்.
எவ்வாறாயினும் பேஸ்புக் உரிமையாளர்களுக்கு தான் இவ்விடயம் தொடர்பில் மின் அஞ்சல் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அதற்கான பதிலைத் தொடர்ந்து இவ்விடயம் குறித்து மேலும் ஆராயவுள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment