த.நவோஜ்-
தமிழ் சிங்களப் புதுவருடத்தினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகமும், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா வாகரை வம்மிவட்டவான் பொது விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக, பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வி.நவிரதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்ன, பதில் பொறுப்பதிகாரி ரிஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவில் காலை ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன், சைக்கிள் ஓட்டம் ஆகியன நடைபெற்றன. அதனையடுத்து மாலை நிகழ்வுகளாக கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டி வம்மிவட்டுவான் வான்மதி விளையாட்டுக் கழகம், கதிரவெளி பிரன்ஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றது. இதில் வம்மிவட்டுவான் வான்மதி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. அத்துடன், கிரிக்கட் போட்டி வாகரைப் பிரதேச செயலக உத்தியேகத்தர்களின் அணிகளுக்கிடையில் நடைபெற்றன.
கலாச்சார விளையாட்டு வரிசையில் முட்டி உடைத்தல், விசேட தேவையுடையோருக்கான ஓட்டப் போட்டி, சிறுவர்களுக்கான மிட்டாய் பொறுக்குதல் என்பனவு நடைபெற்றன. பரிசு வழங்கலின் போது ஏற்கனவே நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கும் பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment