யுத்தத்தை வெற்றிபெற்றோம் என்ற அகங்காரமும் ஆணவமும் பிடித்த ஒரு அரசாகவே இந்த அரசாங்கத்தை காண்கின்றோம். அமைச்சர் ஹக்கீம் .






அஸ்ரப் ஏ சமத்-

யுத்தத்தை வெற்றிபெற்றோம் என்ற அகங்காரமும் ஆணவமும் பிடித்த ஒரு அரசாகவே இந்த அரசாங்கத்தை நாம் காண்கின்றோம் என  ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் நேற்றிரவு (20) தெஹிவளையில் உள்ள ஹில் வீதியில் உள்ள ஹில் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் வசிக்கிற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியலாளர்கள் அரச துறையினர் மற்றும் பொது மக்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். 

இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமைச்சர் பசீர்சேகுதாவுத், செயலாளர் நாயகம் ஹசன் அலி, மற்றும் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத், மற்றும் முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தாவது,
இந்த நாட்டில் பெரும்பான்மையான முஸ்லீம்களின் சக்தியைக் கொண்டதொரு இயக்கம் தான் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியாகும். இந்த நாட்டில் முஸ்லீகளுக்கு பிரச்சினைகள் என்று வரும்போது அதனை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை இக்கட்சிக்கே உள்ளது. அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் அரசுடன் பேசினோம். ஆனால் . எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் சேர்ந்து கூட்டாகவும் சொல்லிவந்தோம். 

இப்பிரச்சினைகளை அரசு கவனத்திற்கு எடுக்கவில்லை ஆகவேதான் முஸ்லீம்களுக்கு வட கிழக்கு யுத்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தொட்டு யுத்தம் முடிந்தபிறகு ஏற்பட்ட சம்பவங்களையெல்லாம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்தோம்.

இந்த அரசு ஜெனிவா பிரேரனையின் வாக்கெடுப்பு தினத்திலேயே இந்த தேர்தலை நடாத்துகின்றது. அவர்கள் அதன் மூலம் சர்வதேசத்திற்கு சொல்ல இருப்பது என்னவென்றால் நீங்கள் என்னதான் தீர்மானம் எடுத்தாலும் இந்நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்கே.
ஆகவே தான் முஸ்லீம் சமூகமும் இத்தினத்தில் முஸ்லீம்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் சக்தியுள்ள முஸ்லிம் காங்கிரசில் ஒட்டுமொத்தமாக உள்ளது என்பதைக் காட்டுவதற்காக அணிதிரள வேண்டும்.

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் இக் கட்சியை ஆரம்பித்து முதன் முதலில் கொழும்பில் மேல் மாகாணத்தில் போட்டியிட்டு இக்கட்சிக்கு உறுப்பினர்களை வெற்றிபெறச்செய்தார். இந்தக் கட்சிதான் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியில் ஆகக் கூடிய பாராளுமன்ற ஆசனங்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட இரண்டாவது கட்சியாகும். 

அரசுக்கு 18ஆம் அரசியல் யாப்புக்கு வாக்களித்து இந்த ஜனாதிபதியை மீள தேர்தலில் போட்டியிடுவதற்கும் எமது 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் வாக்கு அளித்தார்கள். இந்தக் கட்சிதான் சந்திரிக்காக அம்மையாரை ஆட்சியில் அமர்த்தியது. பிறகு அவரின் ஆட்சியை கவிழ்த்தது. அதற்கு முன்னர் காலம்சென்ற ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாகுவதற்கும் உதவியது. ரணிலின் ஆட்சியையும்  ஏற்படுத்தியது. 

ஆனால் இவ்வரசாங்கம் முஸ்லிம் காங்கிரசை உள் அழைத்து அதனை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. அரசுக்குள் உள்ள ஏனைய முஸ்லீம் கட்சிகளுக்கு சமத்துவமற்ற முறையில் உதவி இதனை பலவீனப்படுத்தப் பார்ப்பது இதற்கு உதாரணமாகும். 

ஆனால் அல்லாஹ்வின் உதவியினால் நாங்கள் தனித்து போட்டியிட்டதனால் தான் நாங்கள் கிழக்கின் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக ஏழு மாகாண சபை உறுப்பினர்களைப் பெற்றோம்.

ஆனால் அண்மையில் நடந்த மத்திய மாகாணத்தில் தேர்தலின்போது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஒன்பது ஆசனங்களும், திகாம்பரத்துக்கு மூன்று சீட்டும் வழங்கினார்கள். ஆனால் எமக்கு ஆறு ஆசனங்களை ஒதுக்குவதற்கு மறுத்தார்கள். இதனையே நாம் அம்பாறையிலும் கிழக்கு தேர்தலின்போது கேட்டோம் எங்களுக்கு ஒரு நீதி மத்திய மகாணத்தில் ஒரு நீதியா என அண்மையில் பசில் ராஜபக்சவிடம் நான் எடுத்துக் கூறியபோது அவர் பதில் ஏதும் சொல்லாமல் தடுமாறினார். 

இந்த அரசு முஸ்லீம் சமய விவகார அமைச்சு, மற்றும் ஹிந்து விவகார அமைச்சுக்களை இல்லாமல் செய்து இவ்வாறான அமைச்சுக்களையெல்லாம் பௌத்த அமைச்சின் கீழ்தான் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்டு வந்ததால்தான் சமய விவகார பிரச்சினைகள் இந்த நாட்டில் எழுந்துள்ளன. இதற்கு உதாரணம் ஹஜ் விவகாரத்தில் வருடா வருடம் ஹஜ் கோட்டா விவகாரத்தில் பிரச்சினைகளை எற்படுத்தி அதனை அரசு வேடிக்கை பார்க்கின்றது. 

ஆனால் இந்த அரசு ஜ.தே.கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிகளையெல்லாம் பலவீனப்படுத்திவிட்டனர் இரண்டாக உடைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் முஸ்லீம் காங்கிரசையும் பங்காளி கட்சியாக்கி பலவீனப்படுத்தப் பார்க்கின்றனர். ஆனால் ஒரு போதும் இக் கட்சியை அவர்கள் பலவீனப்படுத்துவதற்கு தொண்டர்களாகிய நீங்கள் இக்கட்சியின் குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட வட கிழக்குக்குள்ளேதான் உள்ளது. ஆனால் எமது கட்சி முஸ்லீம்கள் இந்த நாட்டில் எங்கெல்லாம் மூலை முடுக்குகளில் எல்லாம் சிதறி வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அதனை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு இயக்கமாக மாறியுள்ளது. 

ஆனால் இடை இடையே சில நாடகங்கள் நடக்கும் அதில் ஒரு அங்கமாக சாய்ந்தமருதூரில் அரங்கேற இருப்பதாக அறிகிறேன். அரசுக்குள் இருந்துகொண்டு தமது பிரச்சினைகளை எதிர்கட்சி உள்ளவர்கள்தான் பேசுவார்கள். சர்வதேசத்துக்கு கொண்டு செல்வார்கள். ஆனால் அந்த நடைமுறையில்லாமல் எமது பிரச்சினைகளை ஆகக்குறைந்தது ஆளும் அரசிற்குள் இருந்து கொண்டு இதனை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றால்தான் எதிர்காலத்தில் மீள முஸ்லீம்களுக்கு ஏதாவது அசம்பவிதங்களைச் செய்வதற்கு சிறிதாவது யோசிப்பார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :