பிரபல நடிகை நக்மா காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிலும், நக்மா மாத்திரமே பெண் வேட்பாளர் ஆவார். இதையடுத்து மீரட் நகருக்கு சென்ற அவருக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் போது உரை நிகழ்த்திய அவர், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸுடன் பணியாற்றி வருகிறேன். நடிப்புத் துறையில் நான் அளித்த பங்களிப்பை போன்று என்னால் முடிந்த அளவுக்கு அரசியலிலும் கடுமையாக உழைத்து வருகிறேன். நடிகை என்ற ரீதியில் இல்லாமல் கட்சிப் பணியை முன்வைத்தே பிரச்சாரத்தில் ஈடுபடப் போகிறேன். எனக்கு மீரட் பற்றி எதுவும் தெரியாது. 20 நாட்களே அவகாசம் உள்ளது. உங்கள் பிரச்சினையைப் பற்றி கேட்க வந்துள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்தால் இங்கேயே தங்கிவிடுவேன்.
வேளாண்மை துறைக்காக மத்திய அரசு செயற்படுத்தி வரும் திட்டங்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க சமாஜ்வாதி கட்சி தலைமையிலான மாநில அரசு தவறிவிட்டது. மத்திய அரசு உங்களுக்கு வழங்கிவரும் நிதியுதவி நேரடியாக உங்களுக்கு சென்றடையாமல் இருக்க மாநில அரசு தடையாக உள்ளது. நான் இந்து தாய்க்கும், முஸ்லீம் தந்தைக்கும், கிரிஸ்மஸ்து தினம் அன்று பிறந்தவள், இதனால் என்னை மீராட் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
என்னை இத்தொகுதியில் அறிமுகப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகம் ஒரு மாபெரும் ரோட் ஷோ ஒன்றை ஒழுங்கு செய்தது. ஆனால் இங்குள்ள கட்சி நிர்வாகிகளுக்கே அது தெரியவில்லை. எமது பிரச்சினையே இத்திட்டமிடலில் தான் உள்ளது. நாம் இவற்றை மிகச்சரியாகத் திட்டமிட வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment