இந்த நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுடனேயே ஆரம்பமானது. அதில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாவிடில் மேலும் விளைவுகளை முஸ்லிம்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என்பதை நாம் அரசுக்கு ஆதரவானவர்களாக அன்று இருந்த போது அரசிடம் எடுத்துக்கூறினோம். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற எமது தூர நோக்கு எச்சரிக்கையை அரசு புறந்தள்ளியதால் இதனை கண்டிக்குமுகமாக நாம் அரச ஆதரவிலிருந்து விலகினோம். அதன் பின் இன்று வரை பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன.
தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து தூக்குவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எம்மைப்போன்ற எதிர் தரப்பு அரசியல்வாதிகள் இதற்கெதிராக குரல் எழுப்பியதால் அது கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் பள்ளிவாயலை சூழவுள்ள மக்களை வெளியேற்றுவதன் மூலம் பள்ளிவாயல் தனிமைப்படுத்தப்பட்டு பாழ் படுத்தப்பட்டு அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் பகிரங்கமாக்கப்பட்டதால் தற்போது குண்டுத்தாக்குதல் மூலம் பள்ளிவாயலை சேதப்படுத்தி அதனை திருத்த முயற்சிக்கும் போது சட்டத்தை பயன்படுத்தி தடுக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காண்கிறோம்.
இந்த நிலையில்தான் நாட்டில் அமைதி நிலவுகின்றது என அரசுக்கு ஜால்ரா போடும் முஸ்லிம் அமைச்சர்களும், சில இஸ்லாமிய அமைப்புக்களும் பேரணி நடத்தி கொடி பிடிக்கின்றன. பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு ஹலால் முறை ஒழிக்கப்பட்டு தற்போது தம்புள்ள பள்ளிக்கு குண்டுத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்ட நாட்டை அமைதியான நாடு என புத்தி பேதலித்தவனை தவிர வேறு யாரும் கூற மாட்டான்.
ஆகவே தம்புள்ள பள்ளிவாயல் மீதான தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இது பற்றிய நீதியான விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய விசாரணையை நீதியாக மேற்கொள்ள அரசுக்கு முட்டுக்கொடுக்கும் ஹக்கீம், ரிசாத் ஆகியோரின் கட்சிகள் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
0 comments :
Post a Comment