தெஹிவளை ,அத்திட்டிய பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுல் ஹிபா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அப்பிரதேசத்தின் தலைமை பிக்கு ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வேளையில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள பிக்குவாலேயே பள்ளிவாசலை மூடி விடுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலை அண்மித்துள்ள பிரதேசத்தில் உள்ள சுமநாராம விகாரையின் தலைமை பிக்குவினாலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்ததாவது,
மஸ்ஜிதுல் ஹிபா ஜும்ஆ பள்ளி வாசலானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது. அது சட்ட விரோதமானதல்ல. சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட பள்ளிவாசலாகும். அண்மைக்காலமாக பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள விகாரையில் பள்ளிவாசலை மூடச் செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளதுடன் இந்நிலையிலேயே இன்று பிற்பகல் பள்ளிவாசலுக்கு வந்த சுமநாராம விகாரையின் விகாராதிபதி பள்ளிவாசலை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கண்டியில் இப்தாரை ஒழுங்கு செய்து விட்டு பள்ளிவாசல்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை ஜனாதிபதி மறைக்க முனைகிறார். இதனால் முஸ்லிம்களின் மார்க்க அனுஷ்டானங்களையும் கலாசார விழுமியங்களையும் கடும்போக்கு வாதிகள் அழித்து விட முனைகின்றனர். அண்மையில் மஹியங்கனை பள்ளிவாசல், கிறேன்பாஸ் பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல் உண்டானது. இவ்வாறு பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போருக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்போரை சுதந்திரமாக ன்னடமாத விட்டதன் எதிரொலி தொடர்ச்சியாக பள்ளிவாசல்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. முஸ்லிம்களுக்கு கஞ்சியையும் புரியாணியையும் கொடுக்கும் ஜனாதிபதி ஏன் அவர்கள் எதிர்கொள்ளும் பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க மறுக்கிறார். என தெரிவித்தார்.VV

0 comments :
Post a Comment