எதிர்வரும் செப்டம்பர் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒலுவில் துறைமுகம் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் இத்துறைமுக அபிவிருத்திக்கென கையேற்கப்பட்டு நீண்ட காலமாக நஷ்டயீடு வழங்கப்படாதிருந்த காணிச் சொந்தக்காரர்களுக்கு முற்கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் இன்று திங்கட்கிழமை (26) துறைமுகங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் ரோஹித அபே குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
துறைமுக அபிவிருத்திக்கென கையேற்கப்பட்டு காணிகளை வழங்கியவர்களுக்கு அவர்களது நஷ்டயீட்டுக் கொடுப்பனவில் நில அளவைகள் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்ட தொகைக்கு அமைவாக முற்கொடுப்பனவாக ஒரு பேர்ச்சஸ் காணிக்கு ரூபா 30.000 வழங்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மிகுதிக் கொடுப்பனவுகளை பின்னர் வழங்குவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இம் முற்காடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டயீடு வழங்கப்படாமையை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையினால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment