அரசாங்கத்துடன் சில புரிந்துணர்வை வைத்துள்ள தமது கட்சி எல்லா தேர்தல்களிலும் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என்று ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளவில்லை.
ஆகவே தான் வடக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அந்தச் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்தார்.
வடமாகாண தேர்தலில் மட்டுமல்ல கிழக்கு மாகாண தேர்தலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. நாங்கள் தனித்துவமாக இயங்குகின்ற கட்சி. எனவே எங்களுடைய தனித்துவத்தைப் பேணுவதற்காக நாங்கள் தனித்துப் போட்டியிடுகின்றோம்´ என்றார் ஹஸன் அலி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தைப் பேணுகின்ற அதே சமயம், இந்தப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அத்துடன் அந்தப் பிரச்சினகளைப் பற்றி மக்கள் மத்தியில் தெளிவான சிந்தனைகளை எடுத்துச் செல்வதற்கும் உரிய ஒரு களமாக வட மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கு தனித்துப் போட்டியிடுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
´மக்களுக்குப் பணி செய்வதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம். அரசாங்கத்திற்குப் பணி செய்வதற்காக அல்ல. இன்று இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகம் பல பிரச்சினைளை எதிர்கொண்டிருக்கின்றது.
இந்தச் சூழலில் ஒவ்வொரு சமூகமும் தன்னை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே தான் நாங்கள் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம்´ என்றார் ஹஸன் அலி.
வட மாகாண தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 comments :
Post a Comment