30வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் மக்கள் இன மத வேறுபாடின்றி சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நல்ல சூழலில் 13வது சீர்திருத்தம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் இனமுறுகலை உண்டுபண்ணி அதில் சில தீய சக்திகள் குளிர்காய நினைக்கிறது.அதற்கு எந்த மதத்தவர்களும் ஒரு போதும் அனுமதி வழங்கக் கூடாது என இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இலங்கையில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-20132 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த 13வது சீர்திருத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்ட பயத்திற்கும் அச்சத்திற்கும் மத்தியில் இந்திய அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில் இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டது.
எங்களுக்கு 13ஐயும் தெரியாது 15ஐயும் தெரியாது.மக்களுக்கு அபிவிருத்தியை வழங்குகின்ற எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் அதை நாங்கள் கொடுக்கவுள்ளோம். இன்று தமிழ்பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு தீர்வு காண வேண்டுமென்ற ஒரு நிலையைத்தான் உருவாக்கித் தருகிறோம்.
அரசியல் ரீதியாக பிரச்சினைகள் உருவாக்கி இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தை உண்டுபண்ணி பிளவுகளை ஏற்படுத்தி விடாமல் இன மத மொழி வேறுபாட்டிற்கப்பால் நாமெல்லோரும் ஒரே தாய் நாட்டு மக்களே என்ற உணர்வோடு வாழ வேண்டும்.
இன்று இலங்கை நாட்டை ஆசியாவிலேயே ஆச்சரியமிக்க நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருகின்ற வேளையில் விமான ஓடு பாதைகளை போடுதல்,கப்பல் போக்குவரத்து ஹம்பாந்தோட்டையில் அபிவிருத்தி செய்தல்,வீதி அபிவிருத்திகள் என பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்ற வேளையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜெனீவாவிலும் இலங்கை அரசுக்கு எதிராக சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நாம் ஒரு போதும் அவ்வாறிருக்கக் கூடாது.நாம் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற இன வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்.நான் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முதலாக 1974ம் ஆண்டு வந்தேன்.கடுமையாக பயங்கரமான சூழ்நிலை.இரண்டாவது மூன்றாவது தடவையாக காத்தான்குடியிலுள்ள ரஊப் ஹாஜியார் என்பவரின் வீட்டிற்கு 2008ம் ஆண்டு விமானத்தில் வந்து இறங்கினேன்.2008 ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி நான் இந்த ஊரிற்கு புறப்பட இருந்த போது பாதுகாப்புத் தரப்பினர் இன்றைக்கு நீங்கள் செல்ல வேண்டாம். நாளை பயணத்தை ஆரம்பியுங்கள் ஏனெனில் 1990ம் ஆண்டு பாசிசப் புலிப் பயங்கரவாதிகள் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதிதான் 100க்கும் மேற்பட்ட அல்லாஹ்வை தொழுது சுஜுதிலே இருந்த முஸ்லிம் மக்களை சிறுவர் பெரியவர் பார்க்காது கொன்று குவித்த நாள்.எனவே இன்று போக வேண்டாம்.நாளை போகலாம் என்றார்கள்.
இப்படி எவ்வித அபிவிருத்தியும் காணாது அச்சமானசூழ்நிலை நிலவிய இந்த மாவட்டம் இன்று 2013ம் ஆண்டு நான் வந்து பார்க்கையில் அபிவிருத்திகள் முன்னேற்றம் கண்ட ஒரு மாவட்டமாக அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலகட்டத்தில் நாளுக்கு நாள் கல்வி,பாதை,பாலங்கள்,அடிப்படைத் தேவைகள் என பல்வேறு அம்சங்களில் முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிக்கின்றது இந்த மட்டக்களப்பு மாவட்டம்.
இந்த மாவட்டத்திலே அரசாங்க அதிபராக கடமையாற்றும் பி.எஸ்.எம்.சாரல்ஸிடம் மட்டக்களப்பு மாவட்டம் எப்படியென்று கேட்டேன்.அதற்கு நான் வவுனியாவில் கடமையாற்றும் போது வவுனியா இருந்ததை விட இந்த மட்டக்களப்பு சிறப்பற்று விளங்குகின்றது என்றார். ஆகவே நாம் இன மத மொழி உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment