நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும், வணிக நிலையங்கள், வீடுகள் மற்றும் பிற அபிவிருத்தித் திட்டங்களும், பிரதேச சபையின் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக, பிரதேசத்தில் முறையான அனுமதியின்றி பல கட்டிடங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அவை தொடர்பாக அயலவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் சபை தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, தற்போது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைவரும், மேலும் எதிர்காலத்தில் எந்தவொரு கட்டுமானம் அல்லது வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளவர்களும், சட்டரீதியான அனுமதிகளைப் பெற்ற பின்னரே பணிகளை முன்னெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 52ஆம் பிரிவு மற்றும் 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் (1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டது) ஆகிய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி பெறும் நடைமுறைகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு அலுவலக நாட்களில் நிந்தவூர் பிரதேச சபையை நேரடியாக அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


0 comments :
Post a Comment