புதிய ஆண்டு, புதிய தொடக்கம் – தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவர்களை நோக்கி சிறப்புரையாற்றினார்.

உபவேந்தர் தனது உரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே மாணவர்கள் தங்களின் பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பிப்பது ஒரு சிறப்பான தருணம் எனக் குறிப்பிட்டார். புதிய ஆண்டு என்பது புதிய நம்பிக்கைகள், புதிய பொறுப்புகள் மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் என தெரிவித்த அவர், இந்த நாளிலிருந்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அத்தியாயம் ஆரம்பமாகின்றது என்றார்.

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இடம்பெறுவது ஒரு அரிய வாய்ப்பு என்றும், இது மிகக் குறைந்த திறமையான மாணவர்களுக்கே கிடைக்கும் சிறப்பு சந்தர்ப்பம் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த வாய்ப்பை பொறுப்புடனும் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழக வாழ்க்கையில் கல்விசார் சவால்கள், மொழிசார் சிரமங்கள், பொருளாதார சிக்கல்கள், விடுதி மற்றும் புதிய சூழலுக்கு பழகுதல் போன்ற பல்வேறு சவால்கள் இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இவை அனைத்தையும் எதிர்கால வாழ்க்கைக்கான பயிற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

“பல்கலைக்கழகத்தில் நீங்கள் கற்கும் அனைத்தும் நேரடியாக தொழிலில் பயன்படாவிட்டாலும், ஒழுக்கம், மனப்பாங்கு, சிந்தனை முறை, பிரச்சினைகளை தீர்க்கும் திறன் போன்றவை உங்கள் முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டும்” என உபவேந்தர் வலியுறுத்தினார்.

பாடசாலை வாழ்க்கையை விட பல்கலைக்கழக வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது எனக் குறிப்பிட்ட அவர், இங்கு கிடைக்கும் சுதந்திரம் பொறுப்புடன் இணைந்திருக்க வேண்டும் என்றார். பாடவகுப்புகளில் தவறாமல் பங்கேற்பது, பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது, பிறரை மதிப்பது, வன்முறை மற்றும் தவறான நடத்தைகளை தவிர்ப்பது மாணவர்களின் கடமை என அவர் நினைவூட்டினார்.

மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சமமாக பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பல்கலைக்கழகம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த பன்முகச் சூழலை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

பகடிவதை என்பது இலங்கை சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் எனத் தெரிவித்த உபவேந்தர், பல துயர சம்பவங்கள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதை நினைவூட்டினார். இதனைத் தடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்க விதிமுறைகள் அமுலில் உள்ளதாகவும், அவை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் மனநலத்தை பாதுகாக்க ஹெல்ப்லைன் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை நோக்கி உரையாற்றிய உபவேந்தர், மாணவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பை பேணுமாறும், அவர்களின் மன அழுத்தம் மற்றும் நடத்தை மாற்றங்களை கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஏதேனும் பிரச்சினைகள் தோன்றும் போது பல்கலைக்கழக அதிகாரிகளை அணுக ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதுவரை தென்கிழக்கு பல்கலைக்கழகம் 16,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதாகவும், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம் மட்டும் சுமார் 5,000 பட்டதாரிகளையும் நூற்றுக்கு மேற்பட்ட பட்டமேற்படிப்பு பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரச மற்றும் தனியார் துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், விடுதி வசதி இன்னும் சவாலாக உள்ளதாகவும், இதற்கான முன்மொழிவுகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் மாணவர்களின் பொறுமையும் ஒத்துழைப்பும் அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக 2024/2025 கல்வியாண்டுக்கான Undergraduate Guide வெளியீடு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பீடத்திற்குட்பட்ட துறைத்தலைவர்கள் உரையாற்றினர்.

அதன்படி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஏ. ஷமீம், முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப (MIT) பதில் துறைத்தலைவர் கலாநிதி எம்.வி.எம். இர்ஷாத், முகாமைத்துவ துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.சி. சல்பியா உம்மா, கணக்கியல் மற்றும் நிதி துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். ஷபானா ஆகியோர் புதிய மாணவர்களை வரவேற்று வழிகாட்டினர். மாணவர் சங்கத்தின் தலைவர் உரையாற்றியதுடன், நிகழ்வின் இறுதியில் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எஸ். உமர் பாரூக் நன்றியுரையாற்றினார்.

புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நிகழ்வாக இந்த ஆரம்ப விழா அமைந்திருந்தது. புதிய மாணவர்கள் அனைவரும் கல்விப் பயணத்தில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தனது வாழ்த்துகளை தெரிவித்தது.

நிகழ்வில் பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர், பீடாதிபதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகர், பல்கலைக்கழக பொறியியலாளர், பிரதம பாதுகாப்பு அதிகாரி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.




























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :