இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் . - டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 10


நோய் தீர்க்கும் சேவை (Curative Services )

1869 ம் ஆண்டில் 06 மாகாணங்களை மாத்திரம் கொண்ட எமது நாட்டில் மொத்தம் 15 அரச வைத்தியசாலைகளே இலவச வைத்திய சேவைகளை வழங்கின.

இரண்டு மாவட்டங்கள் கொண்ட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில்
ஒரு கடற்படை மருத்துவமனைக்கு மேலதிகமாக திருகோணமலையில் மருந்தகத்துடன் கூடிய இன்னுமொரு மருத்துவமனையும் காணப்பட்டது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு வைத்தியசாலையும் இருக்கவில்லை.

வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில்

வண்ணார்பண்ணையில் திருச்சபை உதவியுடன் அரச வைத்தியசாலை ஒன்று இருந்தது அதுவே தற்போதைய Jaffna Teaching Hospital ஆகும் .

இதைவிடவும் மானிப்பாயில் அமெரிக்கன் மிசன் நாடாத்தும் கிறீன் வைத்தியசாலையும் இலவச வைத்திய சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வந்தது.

அந்த வருடத்தில் அரச வைத்தியசாலைகள் பின்வருமாறு காணப்பட்டன:

அரச சிவில் வைத்தியசாலை, ஏழைகளுக்கான வைத்தியசாலை, சின்னம்மை நோய் வைத்தியசாலை,

வணிக மற்றும் கடற்படையினர் வைத்தியசாலை, கொலரா வைத்தியசாலை

கூலி தொழிலாளிகளுக்கான லயன் மருத்துவமனை, அத்துடன்

கட்டணம் வசூலித்த இலவச வைத்தியசாலை (ஏழைகளுக்கான வைத்தியசாலையில் ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மற்ற நோயாளர்களிடமிருந்து ஒரு நாளைக்கு ஒரு தொகை கட்டணம் என்ற ரீதியில் வசூலிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது) .

இது தவிரவும் தொழுநோயாளி மற்றும் மனநோயாளிகள் காப்பகமும் காணப்பட்டன.
ஆனால் 1892 இல், முன்னர் காணப்பட்ட ஏழைகளுக்கான வைத்தியசாலை கொலரா மற்றும் சின்னம்மை வைத்தியசாலை என்பனவற்றுக்குப் பதிலாக புலம்பெயர்ந்தோர் வைத்தியசாலை, பீல்ட் அல்லது பறங்கி வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலை, பொது வைத்தியசாலை, பெண்களுக்கான டீ சொய்சா மருத்துவ மனை,மற்றும் சிவில் வைத்தியசாலை என வெவ்வேறு தரத்தில் மொத்தம் 53 வைத்தியசாலைகளும் முதன் முறையாக 47 மத்திய மருந்தகங்களும் பரவலாக காணப்பட்டன.

இதில் கல்முனை மற்றும் மட்டக்களப்பு சிவில் வைத்தியசாலைகளும் கருங்கொடித்தீவு, பொத்துவில் ஏறாவூர் காத்தான்குடி தோப்பூர், மஹாஓயா மத்திய மருந்தகங்களும் அடங்கும்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆண்டில் 1892 இல் காணப்பட்ட வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக பொரல்லயில் பெண்களுக்கான லேடி ஹவலோக் வைத்தியசாலை உட்பட 59 வைத்தியசாலைகள் காணப்பட்டன.

1892 இல் 47 ஆக காணப்பட்ட மத்திய மருந்தகங்கள் 1900 ஆம் ஆண்டு 195 ஆக உயர்வடைந்திருந்தது.

எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் 1892இல் காணப்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை வைத்தியசாலைகளே 1900 இலும் காணப்பட்டன , ஆனால் மத்திய மருந்தகங்களின் எண்ணிக்கை 06 இல் இருந்து 15 ஆக உயர்வடைந்திருந்தது.

மூதூர், வாழச்சேனை, நிலாவெளி, கதிரவெளி, பட்டிருப்பு, கொக்கட்டிச்சோலை, கிண்ணியா, வாகனேரி, தம்பலகாமம் ஆகிய இடங்களிலேயே இக்காலப்பகுதியில் மத்திய மருந்தகங்கள் திறக்கப்பட்டன.

1917 ஆண்டு மொத்தம் 84 வைத்தியசாலைகளும் 441 மத்திய மருந்தகங்களும் ( கிளை மருந்தகங்கள் உட்பட) காணப்பட்டன இதில் பெருந்தோட்ட துறை பகுதிகளில் மொத்தம் 4,047 கட்டில்களுடன் கூடிய 50 அரச மாவட்ட மருத்துவமனைகளும் 74 அரச மத்திய மருந்தகங்களும் அடங்கும். இந்த அரசாங்க மருத்துவ உதவிக்கு மேலதிகமாக

எஸ்டேட் தொழிலாளிகளுக்கான கூடுதலாக, ஐம்பத்தெட்டு தோட்டங்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை, மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக எஸ்டேட் மருத்துவமனைகளை நிறுவிஇருந்தன.

இதற்கு மேலதிகமாக 101 தோட்ட மருந்தகங்கள் 1917ம் ஆண்டில் அரசாங்கத்திடமிருந்து இலவச மருந்து மானியங்களைப் பெற்றன, இது முந்தைய ஆண்டை விட 26 அதிகமாகும்.

1917 காலப்பகுதியில் மருத்துவத் துறை பின்வரும் கட்டமைப்பை கொண்டிருந்தது :

முதன்மை சிவில் மருத்துவ அலுவலர், 1 உதவி முதன்மை சிவில் மருத்துவ அலுவலர், 185, மருத்துவ அலுவலர்கள், 321அப்போதிகரி மருத்துவர்கள், 1 பாக்டீரியாலஜிஸ்ட் மருத்துவர், 1 உதவி பாக்டீரியாலஜிஸ்ட், 1 கண்காணிப்பாளர், 27 ஐரோப்பிய மேட்ரன்ஸ் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள், 55 ஐரோப்பிய மேட்ரன்கள் மற்றும் 55 நர்சிங் சகோதரிகள் (Rev. Sisters மத சகோதரிகள்), 144 உள்நாட்டு மேட்ரான்ஸ் மற்றும் செவிலியர்கள் மற்றும் 40 மாணவர் செவிலியர்கள்.

ஏற்கனவே மத்திய மருந்தகங்கள் செயல்படும் பகுதிகளில் 111 கிராமப்புற மருத்துவமனைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டு முடிந்தவரை 50 கிராமப்புற மருத்துவமனைகள் கட்டுவதற்கான திட்டம் இருந்தன, ஆனால் போர்க்கால (WW II) சூழல் காரணமாக கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களைப் பெறுவதில் சிரமம் காணப்பட்டதால் 1944 ம் ஆண்டில்

ஆறு புதிய மருத்துவமனைகள் மாத்திரம் கட்டி முடிக்கப்பட்டு, மொத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்தது. போருக்குப் பிந்தைய கட்டிடத் திட்டத்திற்கான திட்டங்கள் பரிசீலனையில் இருந்தது .

மருந்தகங்கள்.

ஒரு புதிய மத்திய மருந்தகம், இரண்டு கிளை மருந்தகங்கள் மற்றும் ஒன்பது வருகை நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டு 1944 ம் வருட

முடிவில் மொத்தம் 271 மத்திய மருந்தகங்கள், 151 கிளை மருந்தகங்கள் மற்றும் 406 வருகை நிலையங்கள் இருந்தன.

முன்னெப்போதும் இல்லாத வறட்சி கொண்ட 1945 ஆம் ஆண்டு ,அரசாங்கத்திற்கும் மருத்துவத் துறைக்கும் பெரும் கவலையான வருடமாகும் . இது 1934-35 இன் பெரும் தொற்று வெடிப்புக்கு முன் நிலவிய வறட்சியுடன் ஒப்பிடத்தக்கது, அதன் வெயிலில், பயிர்கள் அழிந்து போனதாலும், போதிய உணவு இல்லாததாலும் சில பகுதிகளில் ஓரளவு துயரம் ஏற்பட்டது. இந்த பேரிடரின் உச்சத்தில், ஏப்ரல், 1945 இல் தொடங்கிய கடுமையான திடீர் தொற்று வெடிப்பு தொற்றுநோய்களின் பெருக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் பஞ்சத்தின் காரணமாக நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு போதுமான சக்தி இல்லாத சமூகத்தின் மீது மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியது.

அதிக உயிரிழப்புகள் ஏற்படாதது அதிர்ஷ்டமே ஆனால், சரியான நேரத்தில் மருத்துவத்துறையின் தீர்க்கமான நடவடிக்கை மற்றும் அரசின் உணவு நிவாரணம் இல்லாதிருந்தால் இப்பகுதிகளில் அதிக துன்பங்களும் உயிரிழப்புகளும், ஏற்பட்டிருக்கும்.

ஐம்பதுகளில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் நிலைமை

மருத்துவ பராமரிப்பு மூன்று வகையான நிறுவனங்களில் நிர்வகிக்கப்பட்டது.

1) மாகாண மருத்துவமனைகள்:500 முதல் 700 படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய நிறுவனமாகும்

2) மாவட்ட மருத்துவமனை:

50 முதல் 200 படுக்கைகள் வரை உள்ள மருத்துவமனை ஆகும். சாதாரண வகை மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு பிரச்சனைகளை கையாளுதல் :
3) மத்திய மருந்தகம் :

இவைகளில் பெரும்பாலானவற்றில் கர்ப்பத்தின் சாதாரண நிகழ்வுகளுக்கு ஒரு மகப்பேறு இல்லமும்(CD&MH), மிகவும் எளிமையான வகை நோய்களுக்கான ஒரு சிறிய மருத்துவமனையும்(RH) இணைக்கப்பட்டிருந்தது.

முன்னர் 1937 ஆம் ஆண்டிலிருந்து, மகப்பேற்று இல்லங்கள் பிரபலமடைந்திருந்தது.

1950ம் வருடம் நாடுமுழுவதும் சராசரியாக 12 படுக்கைகள் கொண்ட 105 மகப்பேற்று மனைகள் காணப்பட்டன, அவற்றில் 93 அரச பொறுப்பிலிருத்தன . ஒவ்வொரு மனையிலும் தகுதிவாய்ந்த மருத்துவமாது மற்றும் ஒரு உதவியாளர் காணப்பட்டனர். இதன் பணி அந்தந்த பகுதியின் சுகாதார மருத்துவ அதிகாரியால் மேற்பார்வை செய்யப்பட்டது. நாளடைவில் இந்த திட்டம் கைவிடப்பட்டு மத்திய மருந்தகங்களுடன் இணைக்கப்பட்டு,மகப்பேற்று மனைகளுடன் கூடிய மத்திய மருந்தகங்கள் (CD&MH) என அழைக்கப்பட்டன.

மேலும் 1950ம் வருடம் மொத்தம் 19,809 படுக்கைகளை கொண்ட 256 அரச மருத்துவமனைகள் காணப்பட்டன. இந்த மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள மருந்தகங்கள் தவிர, 225 மத்திய மருந்தகங்களும்(CD) காணப்பட்டன. இதற்கு மேலதிகமாக 184 கிளை மருந்தகங்கள்(BD)மற்றும் 551 வருகை நிலையங்கள்(VS) இந்த மத்திய மருந்தகங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. 1949 ஆம் ஆண்டில், இந்த மருத்துவமனைகளில் 741,202 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். வெளிப்புற மருந்தகங்களுக்கு 9,420,091 வருகைகள் இருந்தன.( இந்த எண்ணிக்கை சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை மாறாக மொத்த வருகைகளை குறிக்கும் ).

தொடரும்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :