அதிலும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை தமிழர் வாழ்வியலில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அது பல செய்திகளை தாங்கி வருகிறது.
பிரதானமாக "நன்றி" என்ற சொல்லுக்கு அணி சேர்க்கும் ஒரு பண்டிகையாக இப் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இது வேறெந்த சமயங்களிலும் இல்லாத அம்சம் எனலாம்.
தமது வாழ்வியலுக்கு உதவிய சூரியபகவான் மாடுகள் போன்றவற்றிற்கு நன்றி கூறுமுகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். இந்த திருநாள் அன்று அனைவரது வீட்டிலும் அந்த அறுவடையில் கிடைத்த புதிய அரிசியை சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த திருவிழாவாக உள்ளது.
இலங்கையில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்புபடுத்தி சொன்னாலும், அதன் உள்ளே இன்றும் உயிர்ப்புடன் தமிழர்களின் இயற்கையான மெய்யியல் வழிபாடு பொதிந்துள்ளதை காணலாம்.
நான்கு நாள் பண்டிகை
உண்மையில் தைப்பொங்கல் நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப் பண்டிகையின் நோக்கமாகும். இரண்டாம் நாள் தைப்பொங்கல் அன்று, வீட்டு வாசலில் சூரிய உதயத்தின் போது பொங்கல் வைத்து, அதை இலையில் படைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறோம். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
நான்காம் நாள் விழாவாக காணும் பொங்கல் கொண்டாடப்படும். இதை கணு பொங்கல் என்றும், கன்னி பொங்கல் என்றும் சொல்வதுண்டு. இந்த நாளில் மக்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை சென்று சந்தித்து தங்களின் மகிழ்ச்சி, வாழ்த்து மற்றும் இனிப்புக்களை பரிமாறிக் கொள்வதே காணும் பொங்கல் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.
சூரியனின் பயணம் :
பொங்கல் பண்டிகை தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. சூரியன் எந்த ராசியில் தனது பயணத்தை துவக்குகிறாரோ அதற்கு ஏற்க அந்தந்த மாதத்திற்கு பெயர் வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்றவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
2023 ல் பொங்கல் எப்போது ?
2023 ம் ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜனவரி 14 ம் தேதி போகிப் பொங்கல், ஜனவரி 15 ம் தேதி சூரிய பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 15 :
நல்ல நேரம் - காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை
வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :
ஜனவரி 16 : காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எனவே சாதகமான சிந்தனையில் அணுகி புதிய வருடத்தை வரவேற்போமாக..
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment