ஊடக ஒருங்கிணைப்பாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சென்னை மண்டலம்
குடியரசு தின அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் பங்குபெற இருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்ச செயல்பாடுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தமிழகத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சார, பாரம்பரிய ஊர்திகளும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழகம் சார்பில் அணிவகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள் உருவப்படங்கள் அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், குடியரசு தினத்தன்று மேற்குவங்காளத்தின் சார்பில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசு இதன் மூலம் யாரை சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதை முன்னிறுத்துகிறார்கள் என தெரியவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களுக்கு எதிராக பல்வேறு தியாகங்களை புரிந்த உண்மையான சுதந்திரப் போராட்ட தியாகிகளை புறக்கணித்துவிட்டு, ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்.ன் முன்னோர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என கட்டமைக்க முயல்கிறார்களா? என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.
தேசம் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் ஆளும் மோடி அரசின் இந்த செயலானது சுதந்திரப் போராட்ட உண்மை தியாகிகளின் வரலாறுகளை மூடி மறைக்கும் நிகழ்வாகவே பாப்புலர் ஃப்ரண்ட் பார்க்கின்றது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களின் அடையாளங்களை, கலாச்சாரங்களை, மாநில தனித்துவங்களை பிரதிபலிக்கும் அவர்களின் உரிமைகளை அனுமதிக்காததின் மூலம், ஒன்றிய அரசு மாநில கலாச்சாரம் சார்ந்த உரிமைகளை பறிக்கிறது. எனவே, இந்த முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், மேலும் மாநில அரசுகள் ஓரணியில் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கின்றது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment