பாலமுனை ஹெல்த் போரம் மற்றும் பாலமுனை ஜம்மியதுல் உலமா சபை ஆகியன இணைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அனுசணையுடன் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில், ரம்ய லங்கா மற்றும் மேமன் எய்ட் ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில், பாலமுனை ஹெல்த் போரம் அமைப்பின் தலைவர் டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இவ் இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாட்டு நிலைமைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் காலப்பகுதி என்பதால் சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையில், இரத்த தானம் வழங்குபவர்களிடம் முற்பதிவை மேற்கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக நேரம் வழங்கப்பட்டு, குருதிக் கொடையாளர்கள் அழைக்கப்பட்டதுடன் இதில் ஏராளமான இளைஞர்கள், உலமாக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவ் இரத்த தான முகாமை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஸ்ஸெய்க் ஐ.எல்.எம். காஸிம் ஸூரி, பாலமுனை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஸ்ஸெய்க் எம். நிஸ்தார், செயலாளர் அஸ்ஸெய்க் எஸ். ஆப்துல் அஸீஸ், பாலமுனை ஹெல் போரம் சார்பாக டொக்டர் ஏ.எல் சுதைஸ், சிரேஸ்ட தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.எம். உபைதுல்லா உட்பட அமைப்பின் பிரதிநிதிகளும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
உதிரக் கொடை வழங்குவதற்கு பல பிரதேசங்களிலுமிருந்து வருகை தந்து இரத்த தானம் வழங்கியவர்களுக்கு ரம்ய லங்கா மற்றும் மேமன் எய்ட் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் தலா ரூபா ஆயிரத்து ஐந்நூறு பெறுமதியான போசாக்குப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment