எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கைவினைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் (9) கிழக்கு மாகாண கைத்தொழில் திணைக்களத்தில் பிரம்பு, பித்தளை, மற்பாண்டங்கள்,மரவேலை மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமையில் நடைபெற்றது.
தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் விதாதா வள நிலையங்களின் செயற்பாடுகளை விஸ்த்தரித்து கைவினைஞர்களுக்கு அவசியமான தொழிநுட்ப பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தாங்கள் மேற்கொள்ளும் உற்பத்திகளை உரிய நியமங்களை பேணி சர்வதேச சந்தைக்கேற்றாற்போல் விநியோகிக்க இப்பயிற்சி ஏதுவாக அமையும். தொழிநுட்ப பயிற்சிகளை வழங்க பயிற்சி நிலையங்களை ஸ்தாபிக்கவுள்ளோம். செயற்படாமல் உள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் பயிற்சி நிலையங்கள் மீள திறக்கப்படும்.எதிர்காலத்தில் விதாதா வள உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படுவார்கள்.ஜனாதிபதி அவர்கள் கிராமி பொருளாதாரத்தை நாட்டின் அபிவிருத்திக்கு வலுசேர்க்கும் வகையில் இவ்வமைச்சை எனக்கு வழங்கியுள்ளார்.ஒருபோதுமில்லாத நிதி ஒதுக்கீடு இவ்வமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.கைவினைஞர்களுக்கான கருவிகளும் வழங்கப்படும். பொருட்களை விற்பனை செய்வதற்கான மத்திய நிலையம் ஒன்றும் மாவட்டத்தில் அமைத்து தரப்படும் என்று இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் யு.கவிதா ,தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் , உத்தியோகத்தர்கள் மற்றும் கைவினைஞர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment