அரசாங்கத்தின் நுண்கடன் செயற்திட்டத்தினால் வறுமைக் கோட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைகின்றது என்று கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கிராம சக்தி தேசிய வேலைத்திட்டத்தில் நுண் கடன் வாழ்வாதார உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது,
நாட்டில் வறுமையை போக்கி நிலைபேறான அபிவிருத்தியை நிலைநாட்டுவதற்கு தற்போதைய அரசாங்கம் முனைப்புடன் பல்வேறுபட்ட தேசிய திட்டங்களை அமுல்படுத்திக்கொண்டு வருகின்றது. இத் செயற்திட்டங்களை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கின்ற போது நாட்டில் வறுமையை இல்லாமல் செய்து நிலைபேறான அபிவிருத்தியை நிலை நாட்டலாம்.
கிராம சக்தி நிகழ்ச்சித் திட்டத்தில் நாட்டில் 5000 பின்தங்கிய கிராமங்களை தெரிவு செய்து அக்கிராமங்களை முழுமையான
முறையில் வறுமையில் இருந்து விடுவித்து அபிவிருத்தி அடைய வைப்பதே இச் செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
நாட்டில் முறையற்ற விதத்தில் பதிவுகளை மேற்கொண்ட சில தனியார் நிதி நிறுவனங்கள் நுண்கடன் செயற்திட்டங்களுடாக வாழ்வாதார கடன் உதவிகளை வழங்கி அதனூடாக பல்வேறுபட்ட சமூகவியல் பிரச்சினைகள் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு சென்ற விடயங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்து இருக்கின்றோம். இச் செயற்திட்டங்களை முறையாக செயற்படுத்தி மக்களுக்கு சுமைகளை வழங்காமல் அரசாங்கம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.அதனூடாக நாட்டில் வறுமையை ஒழித்து நாட்டை கட்டியெழுப்பலாம் என குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.ஏ.நஸீர், திட்டமிடல் பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி எம்.ஹசன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எஸ். றியாஸ்,எம்.ஐ.எம். நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment