யாரும் பேச விரும்பாத, பேசுவதற்கு பயப்படும் மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் விடயங்களை கடந்த பாரளுமன்ற அமர்வுகளில் பேசிய காரணத்தினால் தான் என்னை இம்முறையும் பாரளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவிக்கையில்,
இங்குள்ள பாரளுமன்ற உறுப்பினர்களில் குறைவான நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பாரளுமன்ற உறுப்பினர் நானே. நானே குறைவான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் செய்ததில்லை. இவ்வாறான நிலையில் 3 தடவைகள் மக்கள் ஏன் என்னை பாரளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள் என சிந்திக்க வேண்டும்.
யாரும் பேசுவதற்குப் பயப்படும், எவரும் பேச விரும்பாத, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் விடயங்களை கடந்த பாரளுமன்ற அமர்வுகளில் பேசியிருந்தேன். இதனாலேயே இம்முறையும் மக்கள் என்னை பாரளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இவ்வாறான விடயங்களை நான் செய்வதால் தற்போது வரையில் 36 வழக்குகள் என் மீது தொடரப்பட்டுள்ளன. நான் விரைவிலேயே சிறைச்சாலைக்குச் செல்லலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் பழிவாங்கல் மூலமாக என்னை சிறையில் அடைத்தாலும், அடைக்காது போனாலும் இந்நாட்டின் நீதித்துறை, நீதிமன்றங்கள் தொடர்பில் மக்களுக்காகப் பேசுவதற்குத் தயாராகவே இருக்கிறேன்.
கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர் பாரளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து நான் அதிகம் பேசப்போவதில்லை. ஏனென்றால் இந்தத் தீர்ப்பு எனக்கும் ஒருவகையில் நல்லதாக இருக்கிறது. நான் சிறைக்குச் சென்றாலும் பாரளுமன்றத்திற்கு வரமுடியும் என்பதால், இது குறித்து நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment