இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அம்பாரை மாவட்டத்தில் பல கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இது , மாவட்டத்தின் அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
பொதுத் தேர்தலில் - இன்று முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அதிகரித்து கொள்வது என்பதாகும்.
முஸ்லிம் சமுகம் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாரை மாவட்டத்திலும் இந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் முஸ்லிம் புத்திஜீவிகள் அதிக கவலை அடைந்துள்ளனர்.
மொட்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தித் தரப்போவதில்லை. மாறாக , 4 என்ற சிங்கள பிரதிநிதித்துவத்துக்கே அடித்தளமிடும்.
அதேபோல் , மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என்பன தனித்து களமிறங்கியுள்ளமை பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலல்ல.மாறாக வாக்குகளை பிரித்து - மாவட்டத்தில் வாக்கு வங்கியுள்ள முகா ஊடான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கே அன்றி வேறொன்றுக்குமல்ல.
தேசிய காங்கிரஸூக்கு - அக்கரைப்பற்றில் மட்டுமே கொஞ்சமாவது வாக்கு வங்கி உள்ளது.வேறெந்த ஊரிலும் அக்கட்சிக்கு வாக்குகள் இல்லை.சாய்ந்தமருதில் அக் கட்சிக்கு வாக்குகள் கணிசமாக உள்ளது என்பது வெறும் மாயையாகும். சிந்திக்கும் ஆற்றலும் தூர நோக்கு பார்வையும் கொண்ட அம் மக்கள் நிச்சயமாக இறுதித் தருணத்திலாவது முகாவுடன் ஓரணி திரள்வார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
மக்கள் காங்கிரஸூக்கும் இதே நிலைதான்.வாக்கு வங்கி என்ற ஒன்று மாவட்டத்தில் கிஞ்சித்தும் கிடையாத நிலையில் அக் கட்சியும் கடந்த பொதுத் தேர்தலைப் போன்று வாக்குகளை சிதறடிக்க வந்துள்ளது என்பதில் மக்கள் தெளிவாகவே உள்ளார்கள்.
முகாவிலிருந்து - முகாவின் வாக்குகளால் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் தான் இன்று அந்தக் கட்சியின் பிரதான 3 வேட்பாளர்கள்.அவர்களுக்கென்றும் இந்த மாவட்டத்தில் வாக்கு வங்கி இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனவே , இன்று முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கியுள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் என்ற சவாலுக்கு மத்தியில் - வாக்குகளை வீணடிக்காமல் முகாவுக்கு வாக்களிக்கின்ற போது 4 முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்கின்ற சாத்தியப்பாடு உண்டு.
முஸ்லிம்கள் ஒன்றுபட்டு - அம்பாரை மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகின்ற முகா வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் சிங்கள வாக்குகளும் சேர்ந்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையே அதிகரிக்கச் செய்யும்.
ஐ.தே.க. - இரண்டாக பிரிந்துள்ளதால் சிங்கள வாக்குகளும் பிரிந்து செல்லும்.அதனால் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகின்ற சிங்கள வேட்பாளர்களின் வாக்குகள் எமக்கே சாதகமாக அமையும் நல்லதொரு வாய்ப்பு தற்போது கிட்டியுள்ளது.இந்த அரிய வாய்ப்பை இத் தேர்தலில் நன்கு பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள உள்ள ஒரேயொரு கட்சியான முகாவுக்கு ஒன்று பட்டு வாக்களிப்போம் என எஹியாகான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.