மலையகத்திற்கே அரசியல் நாகரீகம் கற்றுக்கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சிலர் ஊடகங்களில் விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அநாகரீகமான அரசியல் செய்கிறது என ஒரு சில அரசியல்வாதிகள் அண்மையில் ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு தகுந்த பதில் வழங்கும் வகையில் முன்னாள் மாகாண அமைச்சர் ரமேஸ்வரன் தெரிவிக்கையில்
நெஞ்சுருதியும், நேர்மை திடமும், வஞ்சகமில்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் வல்லமையும் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கும், மலையகத்தின் இளைய சமூகத்திற்கும்; பாரிய சேவையாற்றியிருக்கிறது. கடந்த 75 வருடங்களுக்கு மேலாக எமது சமூகத்தை ஒரு மானமுள்ள சமூகமாக மாற்றியமைத்த வரலாற்று பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரசையே சாரும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் தொட்டு இன்றுவரை இந்த மக்களுக்காக அர்ப்பணிப்போடு சேவையாற்றிக்கொண்டு இருக்கின்ற ஒரு அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள். இந்திய வம்சாவழி மக்கள் ஒரு துணிச்சல் மிக்க வீர தலைவனை இழந்து வாடுகின்றார்கள். தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தால்போல் தவிக்கின்றார்கள். நாங்களும் எமது தலைவனின் திடீர் இழப்பிலிருந்து மீண்டெழமுடியவில்லை. அதற்குள் பலர் பல விமர்சனங்களை தொடுத்து அரசியல் குளிர்காய முனைகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்குமே பெரும் இழப்பாகும். மலையகத்தை பொறுத்தவரையில் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்திருக்கலாம். அவர்களை எண்ணி மக்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. ஆனால் மலையகத்தையும் மலையக மக்களையும் பாதுகாத்த ஒரு உன்னத தலைவர்களாக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் அமரர் ஆறுமுகன் தொண்டமானையுமே மலையக மக்கள் பார்க்கின்றார்கள். மலையக மக்களின் அன்பையும் அரவணைப்பையும் வென்ற ஒரே தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். எவராலும் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. சிலர் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் சப்ரகமுவ,மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு இணைந்து போட்டியிட்டுள்ளார்கள். அதனை மறந்து சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை இவ்வாறு குறைகூறுவது வருந்ததக்கது. காலத்தின் மாற்றத்திற்கேற்ப அவர்களின் நாக்கும் புறலுகின்றது. மலையகத்தை தேசிய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை மறந்துவிட்டார்கள். எத்தனை அரசியல்வாதிகள் தன்னுடைய சுயலாபத்திற்காக வந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே இந்த மலையக சமூகத்தை ஏற்று நடத்தக் கூடிய சக்தி இருக்கின்றது என்பதனை முழு மலையகமும் இலங்கையும் அறிந்திருக்கின்றது. மலையகத்தில் தம்மை ஏக பிரதிநிதிகளாக நினைத்து கற்பனையில் காலத்தை கழிக்கும் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அமரர் ஆறுமுகன் தொண்டமானையுமே மலையகத்தின் தலைமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காட்டுவார்கள் என்றார்.