அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 70 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கேகாலை, கலிகமுவ, அம்பன்பிட்டிய தொழிற்சாலை கேட்போர்கூடத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வை.எம்.எம்.ஏ. பேரவையின் யாப்பின் பிரகாரம், இம்மாதம் (ஜூன்) 28 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த குறித்த 70 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம், கொரோனா வைரஸ் தொற்று (கோவிட் - 19) காரணமாகவே, எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, வை.எம்.எம்.ஏ. பேரவையின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பில், மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற 9 ஆவது நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,
ஏற்கனவே கோரப்பட்ட நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாண்டு வருடாந்த மாநாடு ( Annulal Convention) மற்றும் 2 ஆவது மத்திய குழுக் கூட்டம் (2nd Central Council) இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், வருடாந்தப் பொதுக்கூட்டம் மாத்திரம் ஜூலை 18 ஆம் திகதி நடைபெறும்.
இதேவேளை, அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. க்களின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான வருடாந்தப் பொதுக்கூட்ட அறிக்கைகள் யாவும், அம்ஹர் ஷரீப் (தேசிய பொதுச் செயலாளர்), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. தலைமை அலுவலகம், இல. 63, தெமட்டகொடை வீதி, கொழும்பு - 09 எனும் முகவரிக்கு, இம்மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.