அரசியல் காரணங்களுக்காக வியாபாரிகளுக்குவழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களும் ரத்து! – பிரதேச செயலாளர் றிகாஸ்அறிவிப்பு
சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று காலை (29) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாhஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.சுகுனன், கல்முனை பிராந்தி தொற்று நோய் பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், கணக்காளர் ஏ.எம்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஹமீட், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.எம்.மிஹ்லார், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் செயலாளர் ஏ.மஜீத், பொருளாளர் ஏ.எம்.சலீம், சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்ட கல்முனை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை பிரதேச செயலாளர் இதன்போது அறித்தார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது சாய்ந்தமருது மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்து முழு ஒத்துழைப்பினையும் அரசாங்கத்திற்கும், முப்படைகளுக்கும் வழங்க வேண்டும்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இனி நிவாரணப் பொருட்களை யாரும் நேரடியாக பொதுமக்களுக்கு வழங்க முடியாது. வழங்கக்கூடியவர்கள் பிரதேச செயலகத்தினூடாக வழங்க நடவவேடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலகத்தில் வழங்க்கப்படும் நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படும். நிவராணங்களை வழங்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தாங்கள் விரும்பினால் தங்களது பெயர்களை பொதியில் அச்சிட்டுத் தரலாம்.
மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள், வேக்கரி பொருட்கள், மரக்கறி, மீன் உள்ளிட்ட சகல விதமான பொருட்களையும் உங்களது காலடிக்குக் கொண்டு தருவதற்கான சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களை வீடு வீடாக விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் 5 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் அவர்கள் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய பிரிவு எல்லைகளும் வரையறை செய்து வழங்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியினுள் குறித்த வியாபாரிகள் மக்களுக்கு திருப்தியற்ற அல்லது கொள்ளை இலாபத்தில் பொருட்களை விற்பனை செய்கின்ற முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் குறித்த வியாபாரிக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு அது புதிய ஒரு வியாபாரிக்கு வழங்கப்படும். முறைப்பாடுகள் இல்லாத வியாபாரிகளுக்கு அனுமதிப்பத்திரம் புதுப்பித்து வழங்கப்படும்.
ஏற்கனவே சாய்ந்தமருது பிரதேசத்தில் அரசியல் காரணங்களுக்காக வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் யாவும் இன்றுடன் ரத்து செய்யப்படுகின்றது.
அனுமதிப்பத்திரங்கள் முறையாக பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் ஒப்பத்துடன் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்படுவர். தற்போதை நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் பிணையில் வரவும் முடியாது.
வியாபாரிகள் வெளியூர், வெளிமாவட்டங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியிருப்பின் அவர்கள் பிரதேச செயலாளர் ஊடாக கல்முனை பொலிஸ் நிலையத்தினூடாக அனுமதி பெற்றுச் செல்லமுடியும்.
இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொழில்களை இழந்த சாய்ந்தமருது சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி வங்கியினூடாக குடும்பமொன்றிக்கு தலா ரூபா 10 ஆயிரம் வட்டியில்லா முற்பணக் கடன் வழங்கப்படுவதுடன் சமுர்த்தி மாவட்ட காரியாலயத்தினால் உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும் சாய்ந்தமருதில் அன்றாடத் தொழில்களை இழந்த ஏனையோருக்கும் அரசாங்கத்தினால் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.



