எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது- ரவூப் ஹக்கீம்



னாதிபதி தேர்தலின் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முற்றாக தீர்க்கப்பட்டுவிடும் என்று எவரும் எண்ண முடியாது. எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது. அவ்வாறு யாரும் கனவு காண வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பிரச்சார கூட்டம் புத்தளத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டின் சுபீட்சமான நிம்மதியான வாழ்கைக்காகவும், எதிர்காலத்தில் அரசியல் நெறிமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்து பிரசார கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் என்னோடு பேச வேண்டும் என செய்தி அனுப்பியிருந்தார். அவர் ஏற்கனவே, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில், என்ன விடயம் தொடர்பில் என்னுடன் பேச வேண்டும் என கேட்கப்பட்ட போது, எதிர்வரும் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு முதல் வாக்கை வழங்குவதில் அழுத்தமொன்றை கொடுத்துவரும் நாங்கள், இரண்டாவதாக வழங்கப்படும் வாக்கை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்;குவது பற்றி உங்களோடு கலந்தாலோசிக்க விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.

நான் அதற்கு பதிலளிக்கையில், இரண்டாவது வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறிவிட்டேன். ஏனெனில், இது வெறுமனே பூச்சாண்டி காட்டும் கதையாகவுள்ளது. சஜித் பிரேமதாஸவை தோற்கடிப்பதற்கான ஒரு யுக்தியாகவே இதனை நோக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அல்லது வேறு எந்த தரப்பினர் ஆனாலும் எதிரணியின் கூலிப்படைகளாக தான் நாங்கள் அவர்களை நோக்குகின்றோம்.

இந்நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு எங்களால் முடிந்தளவிற்கு தீர்வுகளை பெற்று கொடுத்துள்ளோம். முஸ்லிம் ஆளுநர்கள் இருவரையும், அமைச்சர் ஒருவரின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அவரையும் பதவியிலிருந்து விலகுமாறு கூறப்பட்டபோது அதற்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து எமது பதவிகளை இராஜினாமா செய்தோம்.

இவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்திற்கு துணை போனவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு அதற்காக புத்த பிக்குமார் தலதா மாளிகைக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்கையில், ஞானசார தேரரும் சென்று அந்த கூற்றுக்கு வலிமை சேர்த்தார். இதன் விளைவாக அன்று எங்களை நோக்கி வரப்போகின்ற அபாயம் என்னவென்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

குறித்த ஆளுநர்களோடும், அமைச்சரோடும் பேசியும் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக இல்லை. இந்த ஆளுநர் இருவரும் சேர்ந்து தான்; ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுவித்தார்கள். தேரரோ வெளியில் வந்த பிற்பாடு இவர்களையே பதவியிலிருந்து விலகுமாறு கூப்;பாடு போட்டார். இல்லை எனில் முழு நாட்டையும் தீக்கரையாக்குவதாக கருத்துபட மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் வேறு வழியின்றி, ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட அனைவருமாக இராஜினாமா செய்வதற்கு முடிவெடுத்தோம். அந்த இராஜினாமா முடிவின் மூலம் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து அவர் தப்பிக்கொண்டார் என்பதையும் அவர் மறந்துவிடக் கூடாது.

இன்று எமது மேடைகளில் ஏறுபவர்கள் தொடர்பில் எவரையும் கட்டாயப்படுத்தி பிடரியை பிடித்து வெளியில் தள்ளிவிட முடியாது. அனைவரும் வித்தியாசமான நிலைப்பாடுகளை கொண்டவர்களாக தான் சஜித் பிரேமதாஸவின் அணியில் இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இருக்கின்றனர், விக்டர் அன்டனியும் இப்போது எம்முடன் இணைந்துள்ளார்.

முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் வேண்டுமென்று பிளவுபடுத்துவதற்காக ஸஹ்ரான் போன்ற கூலிக்கு அமர்த்தப்பட்ட கும்பலை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய வெளிநாட்டு சக்தி எது என்பதை நாங்கள் மிகத் தெளிவாக அடையாளம் காண வேண்டும். இந்த நாட்டில் மக்களை பிளவுபடுத்தி ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட முக்கிய சதி முயற்சி தான் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவமாகும்.

இந்தப் பின்னணியில் தான் சில தனியார் ஊடகங்கள் செயற்படுகின்றன. கப்பம் கேட்டு முஸ்லிம் தலைமைகளுக்கு மேல் முன்னெடுக்கப்படும் இந்த சதி முயற்சிகளை பரப்பிய குறித்த ஊடகத்தின் முகத்திரையை நேற்று (07) ஆதாரத்துடன் கிழித்தெறிந்தேன்.

அந்த ஊடகமானது ஏப்ரல் தாக்குதல் நடைபெற்ற தினத்திலிருந்து இன்று வரையில் எதிரணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பிரசாரம் செய்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு மேல் பாய்ச்சல் நடத்துவதற்கு ஒவ்வொரு நாளும் செய்திகளை ஊதிப்பெருப்பிக்கின்ற வகையில் வெளிட்டுக்கொண்டும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துகின்ற விதத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தும் செல்கின்றது.

இவர்கள் யாருடைய தரப்பை ஆதரிக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களை இழிவுபடுத்தி அயோக்கியர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், வீட்டில் பாண் வெட்டுவதற்கு ஒரு கத்தியை கூட வைத்துக்கொள்வதற்கு இயலாதவர்களாக ஆற்றிலும், குளத்திலும் அவற்றை வீசுகின்ற நிலைக்கு ஆளாக்கிய இந்த தனியார் ஊடகங்கள் யாருக்கு சார்பாக செயற்படுகின்றன என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் எங்களுக்கெதிராக கூச்சலிட்ட கும்பல் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் மிகக் கவனமாக செயற்படுகின்றது. இந்த அசம்பாவிதம் எமது அரசாங்க காலத்தில் இடம்பெற்றமையினால் தான் எமது பதவிகளை இராஜினாமா செய்தோம். இனவாதிகள் என்ற கும்பல் எங்கெல்லாம் இருக்கின்றது என அடையாளம் கண்டுள்ளோம்.

கட்சியின் தீர்மானம் மிக தீர்க்கமானது. அந்த தீர்மானத்தின்பால் புத்தளம் மக்களை அழைப்பதற்காக தான் நான் வருகை தந்திருக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியை இந்தப் போக்கில் போக இடமளிக்க கூடாது, ஆகவே, அதன் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று முதலாவதாக அதற்கு எதிராக குரல் கொடுத்தவன் என்ற அடிப்படையில் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

தேர்தலுக்காக கடந்த கால ஆட்சியாளர்களது மீள்வருகையினால் எங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த கும்பல் தொடர்பில் மிகுந்த அச்சத்தோடு இருக்கின்ற நிலையில் அவர்களோடு சரணாகதி அரசியல் நிலைக்குள் போக முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்தது.

இந்நிலையில் புத்தளத்தின் குப்பை பிரச்சினையானது இன்று தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையின் எல்லா பரிமாணங்களையும் சரியாக அடையாளம் கண்டவன் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாஸவிடம் இது தொடர்பில் கேட்டபோது, அவரது விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விதத்தில் சகல மாவட்டங்களிலும் குப்பைகளை உரிய முறையில் அகற்றப்படுவதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படும். என் மீது புத்தளம் வாழ் மக்களுக்கு முழு நம்பிக்கை வைக்கச் சொல்லுங்கள் என்றார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிலைப்பாடோடு எமக்கு உடன்பாடில்லாமையினால் அவரோடு மிகவும் கடுமையாக முரண்பட்டுள்ளோம். ஒருவித சர்வாதிகார போக்கில் இதனை தீர்த்துகொள்வதற்கு இடமளிக்க முடியாது. ஓரிரு அமைச்சர்களை கைக்குள் வைத்துக்கொண்டும் முழு அரசையும் பணயக் கைதியாக்கி அவரால் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரிலும் பார்க்க முஸ்லிம் காங்கிரஸின் பேரம் சக்தி மிகைத்ததாகவே அமையும். அதனை வைத்துக்கொண்டு தான் இவ்விவகாரத்திற்கு நிரந்தரமான தீர்வை எட்ட முற்படுகின்றோம். இவ்விடயத்தை உதாசீனம் செய்வில்லை. இத்திட்டம் தொடர்பில் திடமான நம்பிக்கை வைத்துள்ளோம். இப்பிரச்சினையின் பாரதூரத்தை அலட்சியம் செய்யவில்லை என்பதை மிகத் தெளிவாக பதிவிடுகின்றேன்.

ஜனாதிபதியாக எவரும் வரலாம் ஆனால், நாங்கள் தனி நபரின் பலத்தில் தங்குபவர்கள் அல்லர். நாங்கள் கட்சியின் பலத்தில் தங்கி நிற்பவர்கள். எங்களது முடிவு மிகவும் திடமானதும் தீர்க்கமானதும். இப்பொழுது சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கும், எதிரணி வேட்பாளரை நிராகரிப்பத்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றவர்களின் கையில் தான் ஆட்சி அதிகாரம் இருக்கப்போகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தெரிவு செய்கின்ற சக்தி யாருடைய கையில் இருக்கப்போகின்றதோ அதனை வைத்து தான் இந்த தீர்மானங்களுக்கு யாரும் வர முடியும்.

எனவே, ஜனாதிபதி தேர்தலின் மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்று யாரும் எண்ண முடியாது. எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி என்றும் அழிந்துபோகாது. அவ்வாறு யாரும் கனவு காண வேண்டாம். இந்த இயக்கத்தை எவர் பலவீனப்படுத்த எண்ணிணாலும் அதற்கு இந்த இயக்கத்தின் போராளிகள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

எனவே தான்; அத்தகைய போராளிகளின் மத்தியிலிருந்து நான் இந்த வினயமான வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். உண்மையான போராளியாக இருந்தால் இப்பிரச்சினைக்கு தலைமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தனி மனித அரசியல் மீது நம்பிக்கை கொள்ளாது இயக்க அரசியலின் மீது நம்பிக்கை வையுங்கள். அனைத்து மக்களையும் ஒன்று திரட்டிய வெற்றி பிரவாகமாக மாற்றியமைக்க வேண்டும்.

ஆகவே, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சம்பந்தமான தெளிவை உருவாக்குவதற்கான தருணமாக இது பார்க்கப்படுகின்றது. நாட்டின் தலைமையை செவிமடுக்க வைக்கின்ற தைரியம் இந்த பேரியக்கத்திற்கு உள்ளது. ஆகவே, நாடு முழுவதிலும் அச்சத்திலும் சந்;தேகத்திலும் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் வாழ்வுக்கு விடிவை வேண்டி சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்விற்கு புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சபீக் ரஜாப்தீன் மற்றும் எம்.எஸ்.எம்.அஸ்லம், புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் உட்பட கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -