இனங்களுக்கிடையில் சாந்தி, சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்


-“வெசாக்” வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் பி. திகாம்பரம்
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்கள் காரணமாக இம்முறை வெசாக் பண்டிகை சோபை இழந்து காணப்படுகின்றது. மக்கள் பண்டிகையை வரவேற்கும் நிலையிலும் இல்லை. எனவே, இந்தப் புனித தினத்தில் நாட்டில் இனங்களுக்கிடையில் சாந்தி, சமாதானம், சௌஜன்யம் நிலவவும், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர், மேலும் தமது செய்தியில்,

எமது நாட்டில் முப்பது வருட காலமாக நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு வந்து கடந்த பத்து வருடங்களாக யுத்தத்தின் கோரத்தை மறந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நூற்றுக் கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், பலர் காயங்களுக்கு ஆளாகியும், சிலர் அடையாளம் காண முடியாமலும் நாடு துயரக் கடலில் மூழ்கியுள்ளது.

தமிழ்- சிங்கள புத்தாண்டை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடிய மக்கள் ஒரு வார காலத்தில் மீண்டும் சோகத்தில் மிதக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பௌத்த மக்கள் கொண்டாடும் வெசாக் பண்டிகையும் களையிழந்து காணப்படுகின்றது. இந்துக்கள் விசாக பௌர்ணமி தினத்தை முழு மனதோடு அனுஷ்டிக்க முடியாமல் உள்ளது. இஸ்லாமிய மக்களின் புனித நோன்புப் பெருநாளும் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. பொதுவாக சொல்லப் போனால் மக்கள் கடந்த காலங்களைப் போல, பண்டிகைகளை ஆடம்பரமாகவும் ஆரவாரமாகவும் கொண்டாடும் நிலையில் இல்லை.

எனினும், பண்டிகை காலத்தில் நாடு சுபிட்சம் பெறவும், பொருளாதாரம் செழிக்கவும், மக்களின் அன்றாட வாழ்வில் அமைதி தோன்றவும், இனமுறுகல் இன்றி ஒரு தாய் மக்களாக அந்நியோன்னியமாக வாழக் கூடிய சூழல் மலரவும் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -