கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் அரச மற்றும் தனியார் பஸ் நடத்துனர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் தலையீட்டினால் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை மதியம் கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் தனியார் பஸ்களையும் தரித்து வைப்பதில் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன் பஸ்கள் எவையும் சேவையில் ஈடுமடாமல் முடக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பிரதிநிதிகளையும் கல்முனை மாநகர சபைக்கு அழைத்த முதல்வர் ஏ.எம்.றகீப், ஆணையாளர் ஏ.எம்.அன்சார் அவர்களின் பங்கேற்புடன் அப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, பிரச்சினைகளை ஆராய்ந்தார். இதன்போது முதல்வர் முன்வைத்த தீர்வினை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு சுமூக நிலைக்கு திரும்ப இணக்கம் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் குறித்த பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தென் பகுதியை தனியார் பஸ்களுக்கும் ஒதுக்குவதற்கும் அதனை சரியாக எல்லையிடுவதற்கும் இனிவரும் காலங்களில் எவரும் எல்லையை அத்துமீறும் வகையில் பஸ்களை தரித்து வைப்பதில்லை என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்ற முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், இரு தரப்பினருக்குமான இட ஒதுக்கீட்டை தெளிவுபடுத்தியதுடன் அவரால் எல்லைக் கோடு வரையப்பட்டு, இரு பகுதிகளும் அடையாளபடுத்தப்பட்டன.