லஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா


ஐ. ஏ. காதிர் கான்-
மாலை தீவு சிறையில் உள்ள லஹிரு மதுசான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மாலை தீவின் புதிய ஜனாதிபதியாக இப்றாஹீம் மொஹமட் சோலியின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக (16) வெள்ளிக்கிழமை மாலைதீவுக்குச் சென்றவேளையிலேயே அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
லஹிரு மதுசான் (27 வயது) எனும் இவ்விளைஞர், மாலைதீவிலுள்ள மாபுசி சிறைச்சாலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், சுமார் மூன்று வருட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வருட காலத்திற்குள் இவருக்கு சிறையில் எதுவித பிணையோ அல்லது அவகாசங்களோ வழங்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மாலை தீவு சென்றுள்ள அமைச்சர் இவரை விடுதலை செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அவசரமாக இறங்கியுள்ளார்.
இது தொடர்பில் புதிதாகப் பதவியேற்ற மாலை தீவு ஜனாதிபதி இப்றாஹீம் மொஹமட் சோலியுடனும், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடனும் அமைச்சர் மாலைதீவில் வைத்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இவர் ஒரு அப்பாவி என்றும், இவ்வாறான நடவடிக்கைகளில் இவருக்கு ஈடுபடுவதற்குத் தேவையான எந்தவித அவசியமும் கிடையாது என்றும், அமைச்சர் இதன்போது முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகளிடம் எடுத்துரைத்தார். அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று லஹிரு மதுசானையும் நேரடியாகச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறினார். அவரை மிக அவசரமாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அமைச்சர் இதன்போது லஹிருவிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
தான் ஒரு முஸ்லிம் அமை ச்சராக இருந்தாலும் கூட, இலங்கை மக்கள் எந்த மதமாக இருந்தாலும், "இலங்கையர்" என்ற உரிமையுடன் அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களை அனுசரிப்பதே தனது கொள்கையாகும் என்று, அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எந்தவித குற்ற உணர்ச்சியுமற்ற லஹிரு மதுசானை, சிறையிலிருந்து விடுவித்து, அவரை அவரது குடும்பத்தாருடன் மீண்டும் இணைப்பதே தனது நோக்கமெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
ஜனாதிபதி இன, மத, மொழி வேறுபாடுகளின்றி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு வருவதையிட்டு, தான் இச்சந்தர்ப்பத்தில் மகிழ்வடைவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். முஸ்லிமான அமைச்சர் ஒருவர், பெளத்த மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் விடுதலைக்காக, இப்படியும் முயற்சிகளை மேற்கொள்வது என்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு சிறந்த முயற்சியாகும். அத்துடன், சமூக ஒற்றுமையை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டும் விடயமாக இது உள்ளதுடன், இது ஒரு வரவேற்கத்தக்க விடயமெனவும், அறிவுதுறை சார்ந்தவர்களும், நலன்விரும்பிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -