ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது என்ற ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என உலமா கட்சிதெரிவித்துள்ளது.
கட்சித்தலைமையகத்தில் நாட்டின் சமகால அரசியல் நிலை பற்றி ஆராயும் கூட்டம் இன்று (17) நடைபெற்ற போது, உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
இன்றைய அரசியல் நிலையில் முஸ்லிம் சமூகம் மிக கவனமாக இருக்க வேண்டும். மகிந்த மைத்திரி மற்றும் ரணில் என்றும் இரண்டாக பிரிந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் முழுமையாக ஒரு பக்கம் நிற்பது ஆபத்தானதாகும்.
எம்மை பொறுத்த வரை மஹிந்த ராஜபக்ஷ எமக்கு மச்சானும் இல்லை மாமனும் இல்லை. ஆனாலும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கொடுத்தது மட்டுமன்றி நாட்டை அபிவிருத்தி செய்தவர் என்பதால் அவரை நாம் மதிக்கிறோம். ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பெயர் சொல்லுமகவு எதுவும் செய்யவில்லை.
மஹிந்த காலத்திலும் முஸ்லிம்கள் சில பாதிப்புக்களை கண்டனர். அது தவறு என்பதை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஒருவர் தன் தவறை ஏற்றுக்கொண்டால் அதனை அவர் திருத்திக்கொள்வார்.
அரசியலில் இங்கு அனைவரும் அவுலியாக்களுமில்லை, அனைவரும் சாத்தான்களுமில்லை.
ஆனால் தனக்கு 99 வீதம் வாக்களித்த கண்டி முஸ்லிம்களை நாசமாக்கிய ரணில் வேண்டாம் என்றே சொல்கிறோம். அவர் சட்டத்துக்கான அமைச்சராக இருந்த நிகழ்வுகளின் போது ஒரே நாளில் கட்டுப்படுத்தியிருக்க முடியும். வேண்டுமென்றே அவர் கலவரத்தை அடக்காமல் இருந்தமை தவறு என இன்னமும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாராளுமன்ற அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை. அதே போல் அதிகாரம் இல்லாத முஸ்லிம் சிறு கட்சிகளான நாம் ஜனாதிபதி மைத்திரியை ஆதரிப்பது எமது ஜனநாயக உரிமை என்பதுடன் இது சமூகத்தின் சமன்பாட்டு நிலையை நாட்டுக்கு சொல்லக்கூடியதாக இருக்கும்.
இன்று முஸ்லிம்களை பார்க்கும் போது ஒரு பக்கம் மட்டுமே சிந்திக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரியின் அண்மைய நிலைப்பாடுகள் ஐ தே கவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதால் முஸ்லிம்களுக்கும் வெறுப்பாக தெரிவதை காண்கிறோம்.
1982ம் ஆண்டு நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தாமல் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி சர்வசன வாக்கெடுப்பை நடத்தி பாராளுமன்றத்தை மேலும் நீட்டியவர்கள், 83ம் ஆண்டு சிங்கள தமிழ் கலவரத்தை உருவாக்கி அப்பாவி தமிழ் மக்களை அழித்தவர்கள் இப்போது ஜனநாயகத்தின் காவலர்களாம் என்பது சிரிப்பை தருகிறது.
இதையெல்லாம் நாம் சொல்லும் பழைய காலத்தையெல்லாம் பேசத்தேவையில்லை என்கிறார்கள். அப்படியென்றால் நாம் ஏன் மஹிந்த காலத்தில் நடந்த பழைய தவறுகளை மட்டும் ஏன் தூக்கிப்பிடிக்க வேண்டும்?
ஆகவே எல்லாப்பக்கமும் நலவும் உள்ளது தீமையும் உள்ளது. ஆன ரணில் விக்ரமசிங்கவின் கட்சிக்கும் அவரால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சிக்கும் முஸ்லிம்கள் தேசிய ரீதியில் 95 வீதம் வாக்களித்தும் இந்த மூன்றரை வருட காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாறாக வடக்கு கிழக்கு இணைப்புக்கான சம்மதம், அம்பாரை, கின்தோட்டை, கண்டி என கலவரங்களுக்கு துணை போனது மட்டுமன்றி அமெரிக்க ஐரோப்பாவின் எடுபிடியாக இருக்கின்றார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மத்திரி அவர்கள் ரணிலின் உண்மை நிலையை தெரிந்தபின் வாளாவிருக்காமல் அவருக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பது பாராட்டுக்குரியதாகும். ரணில் அல்லாமல் வேறு எவரையும் பிரதமராக நியமிக்க தயார் என ஜனாதிபதி சொல்வதன் மூலம் நிச்சயம் நமக்கு தெரியாத பல ஆபத்துக்களை அவர் கண்டிருக்கலாம்.
ஆகவே நாட்டின் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் மட்டும் சார்ந்து நிற்பதை தவிர்த்து இரு பக்கங்களுடனும் சமமாக நிற்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.