உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கை இணைத்து தீர்வுத்திட்டம் தருவாரா என பாராளுமன்றத்தில் வைத்து நாமல் ராஜபக்ஷவிடன் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேட்டிருப்பது சின்னத்தனமானதும் இனப்பிரச்சினை பற்றிய அவரது புரிதலின்மையையும் காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டின் இனப்பிரச்சினையானது வெறுமனே சிங்கள, தமிழ் இனப்பிரச்சினையல்ல. மாறாக முஸ்லிம்களும் என்ற மும்முனைப்பிரச்சினையாகும். தமிழ், மற்றும் சிங்கள பேரினவாதத்தினால் முஸ்லிம்கள், தாங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு அகோரமாக தாக்கப்பட்டுள்ளதுடன் பாரிய இனச்சுத்திகரிப்பும் முகம் கொடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் பேரினவாதத்தினாலும் தெற்கு முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்தினாலும் இன ரீதியான மோதலுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை ஐ நா சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
1987ம் ஆண்டைய சர்வாதிகார ஆட்சியின் போது வடக்கும் கிழக்கும் முஸ்லிம்களிடம் கேட்காமல் இணைக்கப்பட்டு முஸ்லிம் சமூகம் அடிமையாக்கப்பட்டது. அவ்விணைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை மூலம் உருவாக்கப்பட்ட தமிழ் இராணுவம் மற்றும் தமிழ் பொலிசாலும் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் அந்த தமிழ் ராணுவத்தில் இருந்த முஸ்லிம் பொலிசாரும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு காரைதீவு சந்தியில் வைத்து கொல்லப்பட்டனர்.
அது மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு சுமார் 16 வருடங்கள் அச்சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களின் கீழ் இருந்த போது கிழக்கு முஸ்லிம்கள் பாரிய இன ஒதுக்கல்களுக்கும் வேலைவாய்ப்பு போன்ற அரச சேவைகளில் ஒதுக்குதலுக்கும் முகம் கொடுத்தனர்.
அதே போல் வட மாகாண முஸ்லிம்கள் தமது அனைத்து உடமைகளும் தமிழ் பேரினவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பின் விரட்டியடிக்கப்பட்டனர். இன்னமும் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவர்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு தமிழ் கூட்டமைப்பே தடையாக உள்ளது.
இந்த நிலையில் மஹிந்த ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கை இணைத்து தீர்வு வழங்குவாரா என ஸ்ரீதரன் எம் பி கேட்டிருப்பது அவரின் வெட்கங்கெட்ட செயலாகும்.
மஹிந்தவை தமிழ் கூட்டமைப்பு என்றாவது ஆதரித்திருக்கின்றதா? முஸ்லிம்கள் நாம் 20 வீதமாவது கடந்த காலங்களில் மஹிந்தவை ஆதரித்திருக்கிறோம். கிழக்கு முஸ்லிம்களில் பலர் மஹிந்தவுக்கு நன்றி கெட்டவர்களாக இருந்த போதும் தமிழ் பேரினவாதத்தை ஒழித்தமைக்காக அவரை பகிரங்கமாக ஆதரித்துள்ளோம். அதே போல் தெற்கில் சிங்கள பேரினவாதத்தை அவர் கட்டுப்படுத்த தவறிய போது அதற்கெதிராக குரல் கொடுத்தவர்கள் நாம்.
இந்த நிலையில் மஹிந்த ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் வடக்கு கிழக்கு இணையாத இனப்பிரச்சினைக்கான தீர்வே வேண்டும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்த நாட்டின் பெரும்பாலான சிங்கள மக்களும் முஸ்லிம்களும் விரும்பாத வடக்கு கிழக்கு இணைப்பை ஸ்ரீதரன் எம் பி முன் வைப்பது அவரது முஸ்லிம் இன வெறுப்பையும் முஸ்லிம்கள் பற்றிய அக்கறையின்மையையும் அரசியல் வங்குறோத்தையும் காட்டுகின்றது.
அவரது இந்த பேச்சின் போது வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை ஏற்க முடியாது என எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் சபையில் சொல்லாதது கவலைக்குரியதாகும். அவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார்களோ தெரியவில்லை.
பாராளுமன்றத்தில் பேச முடியாவிட்டாலும் இது பற்றி முஸ்லிம் கட்சிகள் அறிக்கை விட்டதையும் காணவில்லை.
ஆகவே வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வை மஹிந்த ராஜபக்ஷ தருவாரா என்ற கூற்றை ஸ்ரீதரன் எம் பி வாபஸ் பெறவேண்டும் என்பதுடன் வடக்கும் கிழக்கும் இணையாத தீர்வுக்கே தாம் ஆதரவு என்பதை மஹிந்த தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது.