கல்முனையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீரை கொண்டுசேர்க்கும் இலக்கினை அடைந்துகொள்ளும் நோக்கில் கல்முனையன்ஸ் போரத்தினால் நடைமுறைப்பட்டுக்கொண்டிருக்கும் “2020 இற்குள் யாவருக்கும் சுத்தமான குடிநீர்” செயற்திட்டத்தின் கீழ் இரண்டாம்கட்டமாக கல்முனை - 01, 02, 03 ஆகிய குறிச்சிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 45 குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை 05-10-2018 அன்று கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
போரத்தின் செயற்பாட்டாளர் ஹமீட் எஸ். லெப்பை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம். எச். முஹம்மது கனி அவர்கள் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அண்மையில் இலங்கை நிர்வாக சேவை தரம் - I அதிகாரியாக (SLAS Class - I) தரமுயர்வு பெற்றிருக்கும் கல்முனை பிரதேச செயலாளர் எம். எச். முஹம்மது கனி அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது நிகழ்வின் விஷேட அம்சமாகும்.
மேலும் கல்முனை பிராந்தியத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக காட்டுத்தீ போல பரவிவரும் போதைவஸ்து பாவணை, கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வும் பயனாளிகளிக்கு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் “2020 இற்குள் யாவருக்கும் சுத்தமான குடிநீர்” திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக கல்முனை - 03, 09, 10 ஆகிய குறிச்சிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.