அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் எண்ணக்கருவில் இலங்கை விளையாட்டு சமூகத்துடன் உலக விளையாட்டு சமூகத்தை இணைத்து விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்' அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன் இணைத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, விசேட அதிதிகளாக அவுஸ்திரேலியா நாட்டின் கஸ்சல்லோ குறூப் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன் இணைத் தலைவருமான மார்சல்லா கஸ்சல்லோ நல்லோ, தென் கொரியா நாட்டின் என்.வீ.ஜி குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் லிம் டொங் பியோ, பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் கலாப் பூ துஹைர், பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள், விளையாட்டுத்துறை விற்பன்னர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சகோதரத்துவம் மற்றும் நட்பை ஏற்படுத்தும் விளையாட்டுத்துறையின் ஊடாக நல்லதொரு சமூகத்தை உருவாக்கும்வகையில் நிறுவப்பட்டுள்ள இவ்வமைப்பானது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டலையும் தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்குவதோடு துறைசார் தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சிகளை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்போது கலந்து சிறப்பித்த பிரதம அதிதி மற்றும் அதிதிகளுக்கு ஞாபகச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு பிரதி அமைச்சர் ஹரீசுக்கு வெளிநாட்டு நிரதிநிதிகளினால் அவரது பணியினை பாராட்டி விஷேட ஞாபகச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.