ஆசியா, ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல முன்னணி தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளையும், பயிற்சியாளர்களையும், முதலீடுகளையும் ஒருங்கிணைத்து வியாபார உலகின் வெற்றிக்கு பெரும் பங்காற்றி வரும் டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் Shine-ADA நிறுவனத்தின் இணை நிறுவுணர் ஆவார்.
சுமார் ஒரு வருடகால முயற்சியின் பலனாக, டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் அவர்களுடனான சினேகபூர்வ நேரடி சந்திப்பு ஒன்று 20.02.2018 அன்று கொழும்பிலுள்ள Mövenpick ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிஸிலங்கா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.மஸாஹிம் (மஸாகி) மற்றும் அதன் முகாமையாளர் எம்.எஸ். நஜீபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, கிழக்கு மண்ணிலுள்ள இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சனைக்கான தீர்வாக அரச, தனியார் யந்திரங்களுடன் இணைந்து பிஸிலங்கா நிறுவனத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றிய ஒரு அறிமுகம் வழங்கப்பட்டது.
அந்த அடிப்படையில், முதற்கட்டமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய துறைகளில் 100 உள்ளக வேலைவாய்ப்பு மற்றும் 1000 சுயதொழில் வாய்ப்பினை உருவாக்குவது தொடர்பிலான BusyLanka-2020 ஐந்தாண்டு காலத் திட்டம் பற்றியும் விபரிக்கப்பட்டது.
அதனை செவிமடுத்த டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன், தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பிலும், பிஸிலங்காவின் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்த தங்களது புரத்திலிருந்து எவ்வாறான ஒத்துளைப்புகள் தேவைப்படும் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், பிஸிலங்காவின் நடவடிக்கைகளை கிழக்கு மண்ணுக்கு மட்டுமன்றி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்காலத்தில் வியாபிப்பதற்கு அதன் முகாமைத்துவத்திடம் எவ்வாறான வியூகங்கள் உள்ளன என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி குறூப்களில் ஒன்றாகிய “புகாரி குறூப்” யின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் “ஜோஸு“ அவர்களுடனான சந்திப்பு ஒன்றும் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதில் பிஸிலங்கா உட்பட ஒவ்வொரு நிறுவனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டவர்களால் டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் தலைமையில் பரஸ்பர அறிமுகங்கள் வழங்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் வியாபார ரீதியாக மட்டுமன்றி சமூக நலன் திட்டங்களிலும் ஒருவருக்கொருவர் உதவியாக எவ்வாறு செயற்பட முடியும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் பிஸிலங்கா சந்தைப்படுத்தல் பிரிவின் வெளியீட்டில் - அண்மையில் கிழக்கு மண்ணின் தகவல் தொடர்பு சஞ்சிகையாக வெளிவந்திருக்கும் இலங்கையின் முதலாவது QR-Connected Live சஞ்சிகையான “ஈஸ்ட்லங்கா“ வின் பிரதிகளும் எல்லோருக்கும் வழங்கப்பட்டன.
இந்த சந்திப்பு பற்றி பிஸிலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.மஸாஹிம் கருத்துத் தெரிவிக்கையில், எமது நல்ல நோக்கத்திற்கு இறைவனால் ஏற்படுத்தி தரப்பட்ட இனியதொரு சந்தர்ப்பமாக இது அமைந்தது என்றும் எமது சர்வதேச தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும் ஆசிய மற்றும் உலக சந்தையை நோக்கி எமது அறிவுசார்ந்த புத்துருவாக்க தயாரிப்புக்களை விஸ்தரிக்கவும் இந்த சந்திப்பு நிச்சயம் ஒரு உத்வேகத்தை வழங்குமென்றும் கூறினார்.
“அமைதியாக இரு.. வேகமாக முன்னேறு..“ (மஸாகி)