ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவு வருடாவருடம் நடாத்தி வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான இஸ்லாமிய செயலமர்வினை இம்முறையும் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி முடித்துள்ளது.
கல்குடாவிலுள்ள பல பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் குறித்த செயலமர்வில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். செயலமர்வின் இறுதிநாளன்று நடாத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை ஜம்இய்யாவின் கல்விப் பிரிவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். இப்ராகீம் மதனி அவர்களின் தலைமையில் மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஜம்இய்யாவின் செயலாளருமான எழுத்தாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ. தௌபீக், பகுதித் தலைவர் கே.ஆர். இர்சாத் ஆசிரியர், செம்மண்ணோடை குபா ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் சாஜஹான் நஹ்ஜி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.