அகில் இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத் தலைவருமான கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் தற்போது சாய்ந்தமருதுக்குச் சென்றுள்ளார்.
இவர் தொடர்பில் அண்மைக் காலத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இவ்வாறான சந்தேகங்கள் எனக்குள்ளும் எழுந்தனதான். அண்மைக் காலமாக அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
செயற்பாடுகளிலிருந்து விலகி காணப்பட்ட நிலையில் பிறிதொரு கட்சியில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும், அவர் இவைகள் அனைத்தையும் “ வெறும் வதந்திகள்” என மறுத்து அறிக்கை விட்டிருந்த போதும் நேற்றிலிருந்து (08) அவர் தொடர்பில் மீண்டும் செவி வழிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் உண்மை நிலைமைகளை அறிய கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு சுருக்கமாக தெரிவித்தார்.
“நான் சாய்ந்தமருதுவில்தான் உள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் எண்ணம் என்னிடம் இல்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் எனக்கு எவ்வித மனக் கசப்பும் இல்லை. நேற்று கொழும்பில் நடந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அதன் போது அமைச்சர் என்னை அழைத்து பல பொறுப்புகளை என்னிடம் கையளித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பையும் என்னிடம் தந்துள்ளார். அத்துடன் இறக்காமம் விடயத்தையும் என்னையே கவனிக்கச் சொல்லியுள்ளார்.“ எனத் தெரிவித்தார்.