அகமதாபாத்:
குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒருவர்கூட இன்று ஓட்டு போடவில்லை. ஜாம்நகர் மாவட்டம் கலாவத் தொகுதியின் கீழ் உள்ள இந்த கிராமத்தில் 1000 வாக்காளர்கள் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டு போட வைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்ததாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதுபற்றி மோர்பி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஐ.கே.பட்டேல் கூறுகையில், “தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அவர்களின் பிரதான குறை குடிநீர் சப்ளை தான். பைப்லைன் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இருப்பினும் அது போதாது, மற்றொரு பைப்லைன் வேண்டும் என்று கேட்டனர். இன்றுகூட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று ஓட்டு போடும்படி வலியுறுத்தினர். ஆனால், யாரும் ஓட்டு போட பூத்துக்கு வரவில்லை.
புதிய பைப்லைன் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறினோம். ஆனால் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும்படி பொதுமக்கள் கேட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிப்பது சாத்தியம் இல்லை. தேர்தல் நாளில் அதுபோன்ற உத்தரவாதத்தை கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்றார்.மாம