அப்படி என்னதான் அதிசயத்தை நிகழ்த்திவிட்டார் இந்த மலாலா யூசுப் சாய் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. தலிபான்களினால் தலையில் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர் என்பதற்காகவா அல்லது இஸ்லாத்தின் சில வரைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விடயங்களை எழுதியும் பேசியும் வருவதனாலா உலகளாவிய ரீதியில் இவருக்கு நோபல் பரிசு உட்பட இத்தனை புகழ் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இஸ்லாமிய விரோத நாடுகள் இவரைத் தம் தலையில் வைத்துக் கொண்டாடுவது போல, இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது போல முஸ்லிம் உலக நாடுகள் இவரைக் கொண்டாடுவதோ, கொஞ்சுவதோ இல்லை.
சரி...இந்த விடயம் மிக ஆழமானது. ஆராய்ச்சிகளுக்கு உரியது. அதனை இப்போது விட்டுவிட்டுத் தற்போது நடந்திருக்கும் ஒரு விடயத்தை மட்டும் பார்ப்போம்.
மலாலா பள்ளிப் படிப்பை நேற்று நிறைவு செய்துவிட்டாராம். அதனை நிறைவு செய்த கை காய்வதற்கு முன்னம், களைப்புத் தீர்வதற்கு முன்னர், நேற்றே டுவிட்டர் கணக்கை ஆரம்பித்து விட்டாராம். இவர் டுவிட்டர் கனக்குத் தொடங்கியதை உலகின் முதல்தர பணக்காரரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸ் வாழ்த்தி வரவேற்றிருக்கிறாராம். 'நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்!' என்று வேறு கூறியிருக்கிறாராம். போதாக்குறைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ், ''மலாலாவுக்கு வாழ்த்துக்கள்!'' என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறாராம்.
“இன்று எனது பள்ளி படிப்பின் கடைசி நாள். டுவிட்டரில் இணைந்த முதல் நாள்’’ என மலாலா டுவிட் செய்த 24 மணி நேரத்துக்குள் அவரை 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின்தொடரத் தொடங்கி விட்டார்களாம்.
மலாலாவுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!