எம்.வை.அமீர்-
புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும் பகிடிவதை அல்லது Ragging ரேகிங்க் என்ற செயற்பாட்டை சில சிரேஷ்ட மாணவர்கள் பன்னெடுங்காலமாக செய்து வருகின்ற போதிலும் தற்போது இவ்வாறான நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளது என்றே கூறவேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை சொற்ப மாணவர்களால் இன்றும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டே வருவது கவலைக்குரிய விடயமாகும்.
பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகிறது
பேச்சுரீதியான (உள) துன்புறுத்தல்
உடல்ரீதியான துன்புறுத்தல்
பாலியல் ரீதியான துன்புறுத்தல்
சில மாணவர்கள் தற்கொலை வரை செல்ல பகிடிவதையே காரணம் எனப்படுகிறது. உடல்ரீதியான துன்புறுத்தல் இறப்புக்கும் காரணமாவதுண்டு. இலங்கையில் வரப்பிரகாஷ் என்ற மாணவனின் மரணம் இத்தகையதொரு சம்பவமாகும். இந்தியாவில் நாவரசு கொலை வழக்கு பகடிவதையால் ஏற்பட்ட ஒரு கொலைச் சம்பவமாகும். இந்தியாவில் பகடி வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இன்னமும் தீர்வின்றித் தொடரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக பகிடி வதை இருக்கிறது. றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே இது குறித்துக் கூறும் போது,பல்கலைக்கழகக் கட்டமைப்பையே சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பாக இந்த பகிடிவதையினை அனேக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவதாகக் கூறுகிறார்.
பகிடிவதை நிறுத்தப்படவேண்டும். நாட்டில் தற்போது பகிடிவதைக்கு எதிராக இறுக்கமான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பகிடிவதையில் ஈடுபட்டதாக ஒருவர் இனங்காணப்பட்டால் அவர் சட்டரீதியாக பெறும் தண்டனைகளால் அவரது வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றார். மாணவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம் அவர்களை புடம்போடுவதற்காகவே அமையவேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் தண்டனை வழங்குவதில் பின்னிற்காது என்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.
2017-02-27 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் பீடாதிபதி கலாநிதி யு.எல்.செய்னுடீன் தலைமையில் இடம்பெற்ற புதிய மாணவர்கள் இணைந்துகொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபவேந்தர் நாஜீம் ஆற்றிய உரையின் முழுவடிவம் இங்கு தரப்படுகிறது.
