முஸ்லீம் சமூகத்தை காப்பாற்றவும் அவர்களின் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ளவும் உருவாக்கிய நல்லாட்சியில் இன்று பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வரும் சூழலில் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் ஆகிய இருவருடனும் பேசி தீர்மானத்துக்கு வராமல், முக்கியமான அரசியல் அமைப்பு மாற்றம், தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் இடம் பெறும் போது அவற்றை முழுமையாக பொறுப்பாக இருந்து செய்வதை விடுத்து மக்களிடையே வீணான கொதி நிலையை உருவாக்க இன்று இருக்கின்ற முஸ்லீம் தலைவர்கள் முனைகின்றார்கள்.
இது முஸ்லீம் சமுகத்துக்கு உகந்த விடயமாகவோ அவர்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் விடயமாகவோ பார்க்க முடியாது. அவ்வாறே வில்பத்து விடயம் வட்டமடு விடயம் அது போல ஏனைய சமுகப் பிரச்சனை களையும் காண முடியும்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஆரம்பித்த இனவாதம் இன்று வில்பத்து வரை அதிகரித்து சென்று இருக்கிறது இவற்றை தீர்ப்பதாகவே வாக்குறுதி அளித்து நல்லாட்சியை உருவாக்கினீர்கள். எந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி இருக்கிறீர்கள்..?
இப்போது அரசிடம் நீங்கள் இணையும் போது செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பதவியும் தங்களது சுயநல தேவைகளும்தான் ஒழிய வேறொன்றுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நல்லாட்சியின் குறைபாடுகளையும் மறைப்பதற்க்கும் திட்டமிடப்பட்ட சர்வதேச சதிக்கு இந்த அப்பாவி சனங்களை இரையாக்குகிறீர்கள்.
எம் மக்களுக்கான பிரச்சனையாக மகிந்த ஆட்சியில் இருந்த பிரச்சனையை இப்போது தோண்டி எடுத்து தம்மை சமுகத் தலைமையென காட்டுகின்ற முயற்சியை முஸ்லீம்கள் இன்னும் நம்புவார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.
எதை உருவாக்குவதற்காக எதை கையிலெடுக்கிறீர்கள் என்பதை அப்பாவி சமுகம் உணர மறுத்தாலும் இறைவன் உணர்ந்திருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முஸ்லிம்களின் நூறு வீத வாக்குகளை பெற்ற அரசில் தலைவர்களுடன் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு இரண்டு சமுகத்தை முட்டி மோத வைக்கின்ற உங்களை போன்றவர்களின் செயற்பாடு குறித்து எதிர்காலத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.