க.கிஷாந்தன்-
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள்ள ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தெற்கு வாசல் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாலயத்தின் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை களவாடிச் சென்றுள்ளனர்.
30.01.2017 அன்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
2016.07.14 அன்று இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதன்போது அம்மனுக்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 30.01.2017 அன்று இரவு வேளை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு நுவரெலியா பொலிஸாருக்கு புகார் செய்யப்பட்டதையடுத்து 31.01.2017 அன்று செவ்வாய்கிழமை நுவரெலியா பொலிஸார் மோப்பநாய்களுடன் ஆலய கட்டிட வளாகத்திற்கு சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இத்தோட்டத்தில் உள்ள ஒருவரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.