ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பேராளர் மாநாடு தொடர்பான விடயங்கள் உறுதி செய்யப்படவுள்ளன. இதன் காரணத்தால் மு.காவின் உயர் மட்டக்குழுவில் உள்ள அங்கத்தவர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு கட்டாய அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.
இதேவேளை சர்ச்சைக்குரிய மு.காவின் செயலாளர் விடயம் தொடர்பில் ஏற்கனவே மு.காவின் தலைமைக்கும், செயலாளராக இருக்கும் ஹசன் அலிக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் அந்த இணக்கப்பாடுகளுக்கான அங்கீகாரத்தை மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் மு.காவினை கிராமமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் உட்பட கட்சியின் கட்டமைப்பு சார்பான புதிய தெரிவுகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.